Monday, May 14, 2018

அபத்தமான காவிரி வரைவுச் செயல்திட்டம்........




*பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம் போல தான் கையாள வேண்டும் என்றும்  அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு மனமில்லையே ஏன்?*
————————————————
இன்று (14.05.2018) மத்திய அரசின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம்.

காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018)  பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், அதன உட்பிரிவு (iv)....

தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிருந்து மாதம் ஒன்றுக்கு  10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறக்க  ஒட்டுமொத்தமான வழிகாட்டுதலை ஒன்றை ஆணையம் கொடுக்கும்.

ஆனால் இந்த ஆணையம் அணைகளை தன் பொறுப்பில் எடுத்து நீரை திறந்துவிடாது என இந்த பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்கு,கர்நாடக அரசுதான் தண்ணீரை திரும்பவும் திறந்துவிட வேண்டிய பழைய இழவுதான்.  இந்த செயல் திட்டம்,ஸ்கீம் , ஆணையம் பிறகு எதற்க்கு.......?
இது மேற்பார்வைப் மட்டுமே செய்யும் என  பிரிவு (9)(ii) குறிப்பிடுகிறது.

பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் மத்திய அரசிடம் முறையிடும்; அதில் மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என வஞ்சிக்கும் சூழல் ......

மத்திய அரசு,25-6-1991 அன்றுகாவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயம் மற்றும்  உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் எதையும் செயல் படத்த வில்லை .
கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்ப் பகிர்வு, தண்ணீர்த் திறந்துவிடுதல் என்பதை தாண்டி காவிரி பாசன நிலங்களில் என்ன பயிர் செய்யலாம், என்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது ,பிற தேவைகளுக்கு எவ்வளவு தண்ணீர் வழங்குவது  குறித்து
அதிகாரம் உள்ளதை கொண்டு மத்திய அரசு தலையீடு எதிர் காலத்தில் இருக்கும்.

பிரிவு (9)(xviii)படி மத்திய அரசு அவ்வப்போது அறிவுறுத்தும் உத்தரவுகள்,
வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என கூறுகிறது.

பிரிவு – 12 படி இந்தஆணையம் தனது பணிகளை தனியாருக்கு விருப்பம் போல குத்தகைக்கு விடலாம்.

இந்திய அரசு வகுத்துள்ள தேசிய தண்ணீர்க் கொள்கையின்படி தனியாருக்கு வணிகம் செய்து சம்பாதிக்க தாராளமாக காவிரி நீரையும் கொடுக்கலாம். அதுபோல தமிழகத்தில் காவிரி நீரை தனியாருக்கு விற்பனை செய்ய இந்த ஆணையத்திற்கு அதிகாரத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. 

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 08/05/2018அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் அமைச்சரவை கூடி முடிவெடுக்கவில்லை. மேலும் அவகாசம் வேண்டுமென்று மத்திய அரசு வழக்கறிஞர் விசாரணையின்போது கேட்டார். அதற்கு காரணம் பிரதமர் மோடி கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவை கூடவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் உரிய அவகாசத்தை கேட்டார். ஆனால் இது தவறான தகவலாகும். ஏனெனில் இந்த விசாரணைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு கேபினெட் கூடி சென்னை, லக்னோ மற்றும் புதிய விமான நிலையங்களை குறித்தெல்லாம் முடிவுகளை மேற்கொண்டபோது, முக்கியமான விவசாயிகளை பேசும் காவிரியை குறித்து மத்திய அரசுக்கு மனமில்லாமல் இருந்தது. 

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் கேபினெட் கூடுவதற்கு நேரமில்லை என மத்திய அரசு கூறியது தான் வேதனை.

ஆனால் ,இன்று(14/05/2018) உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவுச் செயல் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறவில்லை. இப்படி தவறான பொய்யான தகவல்களை மத்திய அரசு சொல்வது எந்த விதத்தில் நியாயம். காவிரி தீர்ப்பாயம் உத்தரவின்படி பக்ரா-பியாஸ் போன்ற அதிகாரம் வாய்ந்த அமைப்பை அமைத்தால் தான் தமிழகத்தில் காவிரியின் உரிமைகளை மீட்க முடியும். திரும்பவும் பேக் டூ ஸ்கொயர் என்ற நிலையில் அணைகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களே பாராமரிக்க வேண்டியது என்ற ஒரு திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டவாறு எந்த நதியும் எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. இந்த நிலையில் நாம் உச்ச நீதிமன்றத்திடம் வைக்கின்ற ஒரே வேண்டுகோள் என்னவென்றால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின்படி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவுச் செயல்திட்டம் முரணானது என்று தான் பரிசீலிக்கவேண்டும். திரும்பவும் அதே நிலைதான் என்றால் எதற்கு நடுவர் மன்றம். உச்சநீதிமன்ற வழக்கு, இவ்வளவு காலம் சட்டப் போராட்டங்கள், தமிழகம் ஏன் இவ்வளவு கொந்தளிக்க வேண்டும் என்று சற்றும் உணராமல் இந்த வரைவுத் திட்டத்தை செயல்படுத்தியது மாற்றாந்தாய் போக்காகும்.

#Cauvery_Management_Board
#Bakra_pyas_Management_Board
#காவிரி_மேலாண்மை_வாரியம்
#பக்ரா_பியாஸ்_மேலாண்மை_வாரியம்
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14/05/2018

படம் - காவிரி கரை,திருவையாறு .

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...