Saturday, May 26, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும், எனது கிராமத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களின் நினைவுகளும்.









-------------------------
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு, 31-12-1980 அன்று, அந்த வருடத்தின் கடைசி நாள். நானும், தி.சு.கிள்ளிவளவனும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பாரமலை,ஏ.எஸ். பொன்னம்மாளும் மாலை 5 மணியளவில் பழ. நெடுமாறன் அவர்கள்  அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது,நான் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்த 75159 என்ற தொலைபேசிக்கு என் பெயரைக் கேட்டு பிபி டெலிபோன் கால் வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இல்லத்தின் சொந்தக்காரர் மறைந்த மீனாட்சி அவர்கள், நெடுமாறனுடைய தொலைபேசி 7657க்கு அழைத்தார். கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ளவர்கள் பதட்டமாக உங்களைக் கேட்டு போன் செய்து கொண்டிருக்கின்றனர் என்று என்னிடம் சொன்னபோது மணிமாலை 6.30. எப்போதும் மாநிலச் செய்திகளை வானொலியில் கேட்பதுண்டு. அப்போது தூர்தர்சன் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் செய்திகள் வரும். இதுவும் சென்னைக்கு மட்டும் தான். தமிழ்நாட்டிற்கு அப்போது இல்லை.

மாலை 6.30 மாநிலச் செய்திகளை செல்வராஜ் தனது இயல்பான கனீர் குரலில் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். திருநெல்வேலி மாவட்டம் (அப்போது தூத்துக்குடி இணைந்த ஒன்றுபட்ட மாவட்டம்) குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டு பலியாகியுள்ளார்கள் என்று சொன்னவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில் அந்த கிராமம் நான் பிறந்த மண். என்ன நடந்தது என்று விசாரிக்க முடியவில்லை. இன்றைக்குள்ள தொலைத்தொடர்புகள் அன்றைக்கு இல்லை. உடனே 07.05க்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரை வரை செல்லும் ரயிலையும் பிடிக்க முடியவில்லை. பாரிமுனையில் உள்ள திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக அரசு விரைவுப் பேருந்தில் கோவில்பட்டி சென்றேன். மறுநாள் காலை 9 மணிக்கு பேருந்தைவிட்டு இறங்கிறவுடன் விவரங்கள் ஓரளவு தெரியவந்தது. அப்படியும் 20 மைல்கள் அப்பால் இருப்பவர்களுக்கு கூட முழுமையான விவரங்கள் புலப்படவில்லை. ஏனெனில் அங்கு அப்படி இறுக்கமான நிலை. எங்களுடைய பகுதி கலவரமாகி, மயான பூமியில் கேட்கும் அவலக்குரல் போல தாய்மார்கள் மத்தியில் அழுகைச் சத்தம் தான் கேட்க முடிந்தது. அன்றைக்கு 1981ஆம் ஆண்டின் புத்தாண்டாகும். வருடம் பிறந்ததும் இப்படியா கேட்கவேண்டும் என்று மனம் பதைபதைத்தது. 

இப்போது பிரச்சனைக்கு வருகின்றேன். நாராயணசாமி நாயுடு தலைமையில் அப்போது வலுவாக இருந்த தமிழக விவசாயிகள் சங்கம், 31-12-1980 அன்று விவசாயிகள் பந்த் போராட்டத்தினை தமிழகத்தில் அறிவித்தது. குறிப்பாக எங்களுடைய கோவில்பட்டி வட்டாரம் தமிழக விவசாய சங்கத்தின் கேந்திரப் பகுதி. ஒவ்வொரு விவசாயிகள் போராட்டத்திலும் சிலர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவது 1972லிருந்து ஒரு கொடுமையான வாடிக்கையாகிவிட்டது. 

அமைதியாக என்னுடைய கிராமத்தில், குருஞ்சாக்குளத்தில் பந்த் நடத்திய போது காலையிலேயே காவல் துறையினர் கிராமத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்டனர்.
அருகாமையில் உள்ள திருவேங்கடம் நகரப் பகுதியில் 31-12-1980 அன்று காலை 11 மணியில் போலீசார் கண்மண் தெரியாமல் விவசாயகளை துவம்சம் செய்தனர். அப்படி  அடிபட்ட விவசாயிகளை அரவணைத்து ஆறுதல் சொல்லி அவரவர் கிராமங்களுக்கு திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் கமிசன் மண்டி ராமசுப்புநாயக்கர். இந்த ராமசுப்புநாயக்கர் த/பெ. மல்லப்பநாயக்கரை போலீசார் அழைத்து சென்று அடித்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் கொடுமைப்படுத்தியும்  உள்ளனர். 
இந்நிலையில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் சோளம், உளுந்து போன்றவற்றை காயவைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை அடித்து காயப்படுத்திவிட்டனர். இப்படி திருவேங்கடம் வட்டாரம் முழுவதும் உள்ள விவசாய கிராமங்களை நாசம்  செய்து வந்தனர். 

திருவேங்கடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் கிராமத்தில் என்றைக்கும் விவசாயிகள் சங்கம் வலுவாக இருக்கும். எனவே இந்த கிராமத்தில் காவல் துறை அத்துமீறி விவசாயிகளை அடித்து துவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் காவல் துறையினர் மாலை 4 மணியளவில் குருஞ்சாக்குளம் கிராமத்தில் பதற்றத்தை உருவாக்கிய போது சாத்துரப்ப நாயக்கர் இங்கே வரவேண்டாம், நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று கையெடுத்து கும்பிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாத்துரப்பநாயக்கரின் நெற்றிப் பொட்டுக்கு கீழேயே காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அங்கேயே சிதறி பிணமாகி விழுந்து அந்த சாலையில் அவரின் இரத்தம் பீறிட்டு ஓடியது. அவர் அருகேயிருந்த தம்பி ரவீந்திரன்17 வயது தான். ரவீந்தரனின் தொப்புளில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.

அதே நேரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த போது அவர் பாய்ந்து சென்று காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தார். ஆனால் காவலர்கள் கன்னாபின்னா வென்று சுட்டனர். 

ஏற்கனவே, சாத்துரப்பநாயக்கரின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகளால் அதிர்ச்சியடைந்த மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் மேலும் மேலும் கிராமமக்களின் மீது துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சி அன்றைக்கு மனித வேட்டையை ஆடியது எம்.ஜி.ஆர் ஆட்சியின் காவல் துறை. அன்று (31-12-1980) மாலை 5 மணிவரை துப்பாக்கி குண்டுகள் வெடித்து காற்றில் கலந்து புகைமண்டலமாக இருந்ததாகச் நேரில் பார்த்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். குண்டடி பட்ட ரவீந்திரனுக்கு முதலுதவி கூட கொடுக்காமல் 3 மணி நேரம் கழித்து இரவு 7 மணிக்கு மாட்டு வண்டியில் ரவீந்திரன் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்ட ராணுவ வீரர் ருத்திரப்பசாமி, அய்யாவு நாயக்கர் (எ) அழகர்சாமி, ராமசாமி நாயக்கர், ரெங்கசாமி நாயக்கர், கணபதி ஆகியோர் பேருந்துகளில் இல்லாமல் மாட்டு வண்டியில் 3 மணி நேரத்திற்கு மேலாக இரவில் பயணித்து; சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணிக்குமேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ரவீந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் அன்றிரவே இறந்தார். மற்றவர்களை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளை அநாதைப் பிணங்கள் போல 03-01-1981 அன்று பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி மயானத்தில் உறவினருக்கு கூட சொல்லாமல் காவல்துறையினரே அடக்கம் செய்தனர். பிரேதங்களின் சொந்தக்காரர் இல்லாமல் எரியூட்டியது தான் கொடுமையிலும் கொடுமை. காட்டுமிராண்டித்தனமாக இந்த நடவடிக்கை எங்களைப் போன்றோருக்கெல்லாம் பெரும் ரணத்தை ஏற்படுத்தியது. பொது வாழ்வில் இருந்து கொண்டு இந்த நடவடிக்கைகளை கூட தடுக்க முடியாமல் கையறு நிலையில் இருக்கிறோமே என்று மனம் வெம்பியது. ஆனால் அன்றைக்கு ஆளுங்கட்சியான எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பதை குறித்தான ஏற்பாடுகளிலும், அந்த மாநாட்டில் ஜெயலலிதா நாட்டியமாடும் நிகழ்விலும் மாநில அரசு நிர்வாகம் மும்முரமாக இருந்தது.

நடந்த துயர நிகழ்வுகளுக்கு திரும்பவும் வருகிறேன். திருவேங்கடம் - கழுகுமலை சாலையில் சாகடிக்கப்பட்ட சாத்துரப்ப நாயக்கரின் பிரேதம் அன்று மாலை 4 மணியிலிருந்து மறுநாள் முன்பகல் வரை அப்படியே அநாதையாக கிடந்தது. இடைப்பட்ட நேரத்தில் அந்த பிரேதத்தை சிலர் எடுத்து ஊர் பொதுக் கட்டிடத்தில் வைத்திருந்தனர். நல்லடக்கம் செய்ய முடியாத நிலை. ஒரே குழப்பமான, வேதனையான, இறுக்கமான நிலையில் இருந்தது. திரும்பவும் போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்றனர். 

இந்த சம்பவம் நடந்தது 31-12-1980. ஆனால், சாத்துரப்ப நாயக்கர், ரவீந்திரனுடைய பிரேதங்கள் 02-01-1981 அன்று (இரண்டு நாள் கழித்து) ரவீந்திரனுடைய தாயார் கேட்ட போது போலீசார் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், 
சாத்துரப்ப நாயக்கர் (55), 
ரவீந்திரன் (20) த/பெ பெருமாள் சாமி, 
இரா.வரதராசன் (33) த/பெ இராமசாமி நாயக்கர்,
ரெ.வெங்கடசாமி (22) த/பெ நல்லைய்யா, 
ர. வெங்கடசாமி நாயக்கர் (50), 

இந்த 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் சாகடிக்கப்பட்டவர்கள். குண்டடிப்பட்டு நீண்டகாலம் சிகிச்சையளித்து இன்னும் உடல் உபாதைகளோடு இருப்பவர்கள்,
அய்யாவு நாயக்கர் (எ) அழகிரிசாமி,
ராமசாமி நாயக்கர், 
ரங்கு நாயக்கர் (எ) ரங்கசாமி நாயக்கர்,
ருத்திரப்பசாமி நாயக்கர்,
கணபதி த/பெ வெங்கடசாமி நாயக்கர்,

ஆகிய ஐவரை பார்க்கும் போதெல்லாம் அந்த துப்பாக்கிச் சூட்டின் நினைவுகள் தான் மனதில் நிழலாடுகின்றன. 

பத்து பேருக்கு மேல் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானவர்களில் 5 பேர் சாகடிக்கப்பட்டனர். அவர்கள் பிரேதங்கள் அனைத்தையும் சாலையில் போட்டு அராஜகம் செய்ததை ஹிட்லருடைய கொடுமையான பாசிச நடவடிக்கைகளை போல அன்றைக்கு அரங்கேறின.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கியால் சுட்ட மந்திரம் என்ற காவலரை அடக்க முடியாத ஆத்திரத்திலும், வேதனையிலும், துக்கத்திலும், பொறுக்க முடியாமல் விவசாயிகள் கல்லால் அடித்து சாகடித்தனர். காவலர் மந்திரம் அதே இடத்தில் இறந்தார். 

கோவில்பட்டி – இராஜபாளையம் (வழி. திருவேங்கடம்), கோவில்பட்டி - சங்கரன்கோவில் (வழி. திருவேங்கடம்), திருவேங்கடம் – விருதுநகர் (வழி. சிவகாசி), திருவேங்கடம் – கழுகுமலை (வழி. குருஞ்சாக்குளம், குருவிகுளம்) ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளே கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை இயக்கப்படவில்லை. அந்த காலக்கட்டத்தில் நாராயணசாமி நாயுடு தொலைப்பேசியில் இது குறித்து அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.மறைந்த சாத்துரப்ப நாயக்கர் விவசாய சங்கத்தின் முன்னோடி, பொதுக்கூட்டங்களில் கடுமையாக கிராமத்து பாணியில் பேசுவார். என்னுடைய மாமனார் கு.வரதராஜன் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் விவசாய சங்கத்தின் முன்னோடி ஆவார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான மறைந்த சாத்துரப்ப நாயக்கருடைய தம்பி ராமானுஜம் விவசாயிகள் சங்கத்தின் மேடைகளில் அவருடைய அண்ணனை போன்று வேடிக்கையாக பேசுவார். வெள்ளாகுளம் சுப்பாநாயக்கர், நெம்மேனி பேராசிரியர் குரு ஜெகந்நாதன், மேலப்பட்டி ஆர்.பி.இராமசாமி, வெம்பக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் கங்கர்செவல்பட்டி பெருமாள்சாமி, டி.சண்முகபுரம் சண்முகம் போன்ற பலரும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு துணையாக அந்த பகுதியில் களத்தில் நின்றார்கள். அன்றைக்கு விவசாயச் சங்கப் போராட்டத்தில் களத்தில் நின்றவர்கள் நீண்ட பட்டியலே உண்டு.

நெல்லை மாவட்ட தென்பகுதியில் இராதாபுரம், வள்ளியூர், சாத்தான்குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் சுப்பிரமணிய நாடார், பால்பாண்டியன், அதிசய மணி போன்ற பலரும் விவசாயச் சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்று நினைவு கொள்ள வேண்டியவர்கள். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.அதை என்னுடைய விவசாயச் சங்கப் வரலாறு புத்தகத்தில் தொகுத்து வருகின்றேன்.

அன்றைக்கு ஊடகங்களோ, வார இதழ்களோ, புலனாய்வு பத்திரிக்கையிசம் இல்லாத காலத்தில் இதெல்லாம் நடந்தன.
இன்றைக்கு இதே பிரச்சனை நடந்திருந்தால் என்ன மாதிரியான நிலைமைகள் இருக்கும். 37 ஆண்டுகள் மேல் கடந்து விட்டன. அன்றைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ அவர்கள், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.அழகிரிசாமி அவர்கள் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார்கள்.ஓரளவு நான் கிராமத்திற்கு சென்று அந்தக் காலக்கட்டத்தில் ஆறுதல்படுத்த முடிந்தது. ஆண்கள் யாரும் இல்லாமல் காட்சியளித்தது.

திருவேங்கடத்தில் வைகோ தலைமையில் திமுக சார்பில் கண்டனக் கூட்டம் 18-01-1981இல் நடந்தது.பேராசிரியர் இந்த கலவரப் பகுதி கிராமங்களை பார்வையிட்டு கண்டன உரையை ஆற்றினார்.அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தாழை கருணாநிதியும் கலந்து கொண்டார்.இதற்கிடையில் விவசாய சங்கத் தலைவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருந்தார்.முரசொலி மாறன், வைகோ அவர்கள் இந்த துப்பாக்கிச் சூடு குறித்தான பிரச்சனையை டில்லியில் பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு அளித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.

இதே நாளில் விவசாயிகள் திருத்தணி அருகேயும், அன்றைய தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள வேப்பூரிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன.இது குறித்து சட்டமன்றத்தில் 04-02-1981அன்று தலைவர் கலைஞர் எம்.ஜி.ஆரை நேரெதிரே நின்று விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயம் தானா என்று குற்றஞ்சாட்டி கேட்டார். அவரோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவில்பட்டி எஸ்.அழகிரிசாமியும் இதை குறித்து கடுமையாக அரசை சாடியும் குரலெழுப்பினார். எம்.ஜி.ஆர் இதற்கு பதிலளிக்கும் போது ஓய்வு பெற்று ராணுவத்தினர் அந்த கிராமத்திலே உள்ளார்கள். காவல் துறையினருக்கு கடுமையான தடைகளை உண்டாக்கி உள்ளார்கள் என்று ஒரு சின்ன குழி வெட்டப்பட்ட கருப்பு-வெள்ளை புகைப்படத்தையும் காட்டினார். அவர்கள் இராணுவத்தினர் போல காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்று சட்டமன்றத்தில் கூறினார்.

நீதி விசாரணை நடத்தவும் தயார் என்று அன்று அறிவித்தார். அதற்கு முன் எதற்கெடுத்தாலும் நீதிவிசாரணை என்று கொக்கரிக்கிறார்களே என்ற எம்.ஜி.ஆர் பின்னர் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழ.நெடுமாறன் அவர்கள் பார்வையிடவும் அப்போது வந்தார். சட்டமன்றத்தில் இதை குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தினை 23-01-1981 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சோ.அழகிரிசாமி கொடுத்தபோது, பேரவைத் தலைவர் ஆளுநர் உரையாற்ற இருப்பதால் கவன ஈர்ப்புக்கு அனுமதி வழங்க முடியாதென்று 1397/81-1 ச.பே.(ம.2), 23-01-1981 என்று எண்ணிட்ட கடிதத்தின் மூலமாக பேரவைத் தலைவர் நிராகரித்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை கடுமையாக கண்டித்தனர். அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் (எம்.பி.எஸ்), ஜனதா கட்சித் தலைவர் முகமது இஸ்மாயில் போன்ற அனைத்து கட்சிகளும் நீதி விசாரணை அமைக்க கோரியும் எம்.ஜி.ஆர் எந்த விசாரணையும் அமைக்கப்படவில்லை. இப்படியான இந்த பிரச்சனை குறித்து சொல்லிக் கொண்டே போனால் நீண்ட பதிவாகிவிடும்.

இது குறித்து அன்றைய ஆங்கில தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்விரிவான செய்திகளை அந்த காலக்கட்டங்களில் வெளியிட்டது.அன்றைக்கு ஆங்கில இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து அன்றைய சிறப்புச் செய்தியாளர் எம். நாராயணன் விரிவாக 3,4 பத்திகள் அளவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விரிவாக செய்திகளை சேகரித்து எழுதியது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பார்வைக்கு செல்ல வசதியாக இருந்தது.அதே போலவே தினமணி, தினத்தந்தி, தினமலர், தினகரன் ஏடுகளும் தொடர்ந்து விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. முரசொலியில் வைகோவின் அறிக்கையையும், கலைஞரின் சட்டமன்ற பேச்சும், பேராசிரியரின் திருவேங்கடத்தின் பேச்சும் அந்த காலக்கட்டத்தில் வெளியாகியிருந்தது.
குறிப்பாக கோவில்பட்டி, சங்கரன்கோவில் அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்தது. முதல் துப்பாக்கிச் சூடு கோவில்பட்டி பழைய அப்பனேரி கந்தசாமி நாயக்கர் (55) துவங்கி சாத்தூர் வெத்தலையூரணி சீனிவாசன், இறுதியாக 1993இல் ஜெயலலிதா ஆட்சியில் இருதய ஜோசப் ரெட்டியார், வெங்கடாசலபுரம் எத்திராஜலு நாயக்கர் வரை காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சாகடிக்கப்பட்டனர். இது தான் விவசாயிகள் மீது இறுதியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு துயரச் சம்பவம் ஆகும்.

விவசாயிகள் போராட்டம் 1979இல் நடந்த போது சங்கரன்கோவில் அருகேயுள்ள பணவடலியில் விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தச் சென்ற பணவடலி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அய்யாபழம் மீது கல்லாலும், ஆயுதங்களாலும் அடித்து கொன்றுவிட்டார்கள் என்று நாராயணசாமி நாயுடு, பரமசிவம் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கோவையில் கைது செய்யப்பட்டு மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் வழியாக இரவில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதெல்லாம் நினைவுகளாக மனதில் எழுகின்றது.

இந்த சம்பவங்கள் நடந்தது எல்லாம் தை மாதம் பிறப்பதற்கு முந்தைய காலக்கட்டம்.இந்த காலக்கட்டத்தில் தான் நெல் அறுவடை செய்ய வேண்டும். நெல் அறுவடை செய்ய முடியாமல் ஒவ்வொரு அடிமைகள் போல, அகதிகள் போல வாழ்ந்தது எனக்கெல்லாம் கண்ணீரினை வரவழைத்தது. அடியேன் பொது வாழ்க்கையில் இருந்தாலும் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மூலமாக தான் இதை குறித்தான விவரங்களை பேசி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நிலையில் இருந்தது. இதே காலக்கட்டத்தில் தான் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து அரசின் ஜப்தி நடவடிக்கைகளையும் ஓரளவு தடுத்து நிறுத்தி, கடன் நிவாரணங்களையும் பெற்றுத் தர முடிந்தது.

விவசாய சங்கப் போராட்டத்தில் 1972லிருந்து அக்கறையும் ஆர்வமும் எடுத்து நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமிக் கவுண்டர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கரூர் முத்துசாமிக் கவுண்டர், செங்கல்பட்டு மாவட்டம் புழம்பாக்கம் முத்துமல்லா ரெட்டியார், வி.கே. ராமசாமி, திருத்தணி வழக்கறிஞர் சின்னிகிருஷ்ணய்யா, தருமபுரி சின்னசாமி, பொன்னேரி வாசு, வேட்டுவலம் மணிகண்டன் போன்ற பலரின் பணிகளையெல்லாம் மறக்க முடியாது. இப்படி ஒரு நீண்ட பட்டியலை நாராயணசாமி நாயுடுவின் தளபதிகளாக ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்தார்கள். திரு. செல்லமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். எஸ். பழனிச்சாமி, மயில்சாமி போன்ற பலரின் பணிகளும் நினைவிற்கு வருகின்றன. இந்த இயக்கம் கடுமையான உழைப்பில், தியாகங்களில் வளர்ந்த இயக்கம். அந்த இயக்கத்திற்கான உரிய அங்கீகாரத்தை தமிழக மக்கள் வழங்கவில்லை. அந்த காலக் கட்டத்தில் அடியேன் விவசாய சங்கப் பணிகள், அரசியல் பணிகள், வழக்கறிஞர் பணிகள், பிரபாகரனோடு விடுதலைப் புலிகளுக்கான பயிற்சி மற்றும் களப்பபணிகளுக்காக சுற்றிக் கொண்டே ஓடிய காலம். இந்த சூழல் தான் எனக்கு பொது வாழ்க்கை பயிற்சியின் உலைக்களமாக திகழ்ந்தது.

இந்த இயக்கம் வலுப்பட்டிருந்தால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டு இன்றைய விவசாயிகள் நிம்மதியாக, கௌரவமாக இருந்திருக்கக் கூடும்.நாராயணசாமி நாயுடு தனது கள உழைப்பால் அனைவரையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுடைய ஒற்றுமையை நிலைநாட்டி ஒரு ஆளுமையாக திகழ்ந்தார்.ஆனால் அவரைகாலமும், இயற்கையும் 1984இல் தேர்தல் நேரத்தில் பறித்துக் கொண்டது. கோவில்பட்டி பயணிகள் விடுதியின் பின் அறையில் ஓய்வில் இருக்கும் போதே நெஞ்சுவலியில் உயிர் பிரிந்தது.அங்கு செல்லும் போதெல்லாம் அவரின் முகம் நினைவில் வரும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடுவுக்கு ஒரு சிலை எழுப்ப பல்வேறு முயற்சிகள் செய்தாலும் ஆட்சியாளர்கள் இவரின் முக்கியத்துவம் தெரியாமல் நடந்து கொள்வதும், அதை குறித்து பேசினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்ற நிலைப்பாடு தான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இந்த சிலை அமைக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமைந்துவிட்டது.மறைந்த நாராயணசாமி நாயுடு ஒரு ரோல் மாடல். இவருடைய போர்குணத்தை கொண்டுதான் வடஇந்தியாவில் திக்காயத், மராட்டியத்தில் சரத் ஜோஷி, ஆந்திரத்தில் செங்கால் ரெட்டி, கர்நாடகத்தில் நஞ்சுண்டராவ் என்று பலரும் இவருடைய பாதையை மாதிரியாக கொண்டு விவசாயிகளின் உரிமைகளை காக்க அவர்களுடைய மாநிலங்களில் போராட்டக் களத்தை அமைத்தனர்.

திரும்பவும் செய்திக்கு வருகின்றேன். எங்கள் கிராமத்தில் 1981இல் தைப் பொங்கல் இல்லை. பிப்ரவரி 20க்கும் பிறகுதான் அனைவரையும் தேடிப்பிடித்து கிராமங்களுக்கு அனுப்பக்கூடிய பணிகளை செய்தோம். அதன்பிறகு தான் இயல்பு வாழ்க்கை கிராமத்தில் திரும்பியது.அப்போது அரசியலில் ஒரு பக்கம் இருந்தாலும், விவசாய சங்கத்தில் நாராயணசாமி நாயுடுவுடன் களப்பணியிலும் அடியேன் இருந்தேன்.மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஜி.ரங்கா விவசாயத்தை சங்கத்தை நடத்துப்பா., அரசியல் எதற்கு? என்று வேடிக்கையாக சொன்னதுமுண்டு.

அப்போது தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. ஜெராக்ஸ், பேக்ஸ், கைபேசி, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி கிடையாது. வானொலியில் தான் செய்திகள் கேட்க வேண்டும்.இந்த நிலையில் அன்றைக்கு காட்டுமிராண்டித்தனமாக எம்.ஜி.ஆர் அரசு விவசாயிகள் மீது நடந்து கொண்டபோது அவர்களை பாதுகாக்க எவ்வளவோ சிரமங்கள் பட்டோம்.அதை சொல்லி மாளாது.இன்றைக்கு தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு என்றால் உலகளவில் செய்திகள் போய்விடுகிறது. அன்றைக்கு 45 நாட்களில் விவசாயிகள் குடும்பங்களில் அமைதியை ஏற்படுத்தியது இன்றைக்கும் நினைத்தால் மலைப்பாக உள்ளது.

ஏதோ முடிந்ததை செய்தோம் என்ற ஆறுதல்.காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன. ஆனால் வரலாற்றுப் பதிவுகளில் எதிர்காலத்தில் இந்த சம்பவங்கள் எல்லாம் தெரியவேண்டும் என்பதால் தான் எங்கள் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஓரளவு சுருக்கமாக இங்கே வைத்துள்ளேன். முழுமையான பதிவு இது இல்லை.

#விவசாயிகள்_போராட்டம்
#துப்பாக்கிச்_சூடுகள்
#ஸ்டெர்லைட்
#சி_நாராயணசாமி_நாயுடு
#தமிழக_விவசாயிகள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...