Tuesday, May 1, 2018

பேச்சிப்பாறை அணையில் ஆக்கிரமிப்புகள்.

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளில் பேச்சிப்பாறை அணையும் ஒன்று. குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரளியாற்றின் குற்ககே கட்டப்பட்டிருக்கிறது.திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுமைகயில் கன்னியாகுமரியில் 1897இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1906இல் முடிக்கப்பட்டது. இந்த அணை உருவாக வெள்ளைக்கார இன்ஜினியர்கள் பலர் காரணமாக இருந்தபோதிலும், அணை கட்டும் பகுதியில் செயற்பொறியாளராக பணியாற்றிய ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்ஜின் தான் மக்கள் மனதில் நீக்கமற கலந்திருப்பவராகவும், இன்றளவும் மக்களால் பேசப்படும் பெருமைக்குரியவராக திகழ்கிறார்.

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள், எந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு எவ்வளவு பெரிய கட்டிடங்களையும் அசாத்தியமாக கட்டி முடித்துவிடலாம். ஆனால் எந்த வசதியும் இல்லாமல் ஒரு நூற்றாண்டிற்கு முன், அடர்ந்த காட்டுப்பகுதியில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் வாழ்நாளை அணைகட்டும் பணிக்காக அர்ப்பணித்தவர் தான் இந்த மிஞ்சின். 1897ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணி 1906ம் ஆண்டு நிறைவடைந்தது. அணையின் உயரம் 42 அடி (சுதந்திரத்துக்கு பின்னர் உயரம் மேலும் 6 அடி உயர்த்தப்பட்டது) ஆகும். இதற்கு செலவு செய்த தொகை ரூ. 26.10 லட்சம் ஆகும். அணை கட்டும் பணியை சிறப்பாக முடித்த மிஞ்சின், திருவிதாங்கூர் மன்னரின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். அணையை கட்டியதோடு மட்டுமல்லாமல், அதன் பிரதான கால்வாய்களான இடதுகரை கால்வாய், தோவாளை கால்வாய் உள்ளிட்ட பிரதான கால்வாய்களை வெட்டிய பெருமை இவரையே சேரும். காமராஜர் ஆட்சியின் போது பேச்சிப்பாறை அணையில் கூடுதலாக தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் அணையின் உயரம் 6 அடியாக அதிகரிக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பாழாற்றில் பாய்ந்து, களியல், திற்பரப்பு, மாறப்பாடி வழியாக சென்று தேங்காய்ப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. இந்த அணையில் பல குடிநீர் திட்டங்கள் இருக்கின்றன. இந்த அணையின் தண்ணீரை குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்திலும் பல ஊர்கள் பயன்படுத்துகிறது.பேச்சிப்பாறை அணையில் உள்ள ஆறு மதகுகளின் வழியே 39 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறும். கடந்த 1992இல் ஒரு முறை அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டபோது பாழற்றை ஒட்டிய கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது. அதன் காரணமாக தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குழித்துறை தபால் நிலையம் வரை நீரில் மூழ்கியது. தற்போது 39 ஆயிரம் கனஅடி நீரைத் தேக்குவதற்கு கூட ஆற்றின் அளவு இல்லை. தற்போது அணையில் மேலும் 8 மதகுகள் அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கூடுதலாக 17ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும். மொத்தமாக 56 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். புதிய மதகுகளைக் கொண்டு அணையின் உயரத்தை அதிகரிக்கவும், ரூ.61.30 கோடி உலக வங்கி மதிப்பீட்டில் பேச்சிப்பாறை அணையை மேம்படுத்த வழங்குகின்றது. இதுபோன்று 7 மாநிலங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. அணையை பலப்படுத்துதல், புதிய சுவர் எழுப்புதல், தண்ணீர் திறப்பு குறித்தான அபாய ஒலிக் கருவி, ஜெனரேட்டர் எனப் பல வசதிகளையும்அணையின் பாதுகாப்பு கருதியே செய்யப்படுகிறது. கனமழை பெய்தால் நீரைவெளியேற்றுவது என்பது சிக்கலாகிவிடும்.மண் அரிப்பை தடுக்கும் விதமாக பாறைகள் நிறைந்த பகுதிகளில் நீரை வெளியேற்ற இடமும் அளிக்கப்பட்டுள்ளது. அதிக மழை பெய்தால் 17 ஆயிரத்து 550 கனஅடி நீரை வெளியேற்ற கூடுதலாக எட்டு புதிய சட்டர்கள் அமைக்கப்படுகிறது. கடந்த 1992ஆம் ஆண்டு பெய்த 300மி.மீ., மழையை விட இரண்டு மடங்கு அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வரும் காலத்தில் 550 மி.மீ மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. தண்ணீரை வெளியேற்றினால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்காக நடவடிக்கைகளை எடுத்து முழு ஆற்றையும் அளந்து கணக்கிட வேண்டியது அவசியம். #மூக்கன்_துரை #பேச்சிப்பாறை_அணை #கன்னியாகுமரி_மாவட்டம் #KSRadhakrishnanPostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 01-05-2018

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...