Friday, October 26, 2018

கி. ரா வின் பாடுபடும் சம்சாரியின் கதை (அந்தமான் நாயக்கர்)


கி. ரா வின் பாடுபடும் சம்சாரியின் கதை (அந்தமான் நாயக்கர்)
----------------------------------------------------------
கொஞ்ச நாட்களுக்கெல்லாம், அந்த சிறைச்சாலைக்குள்ளே சிகப்புச் சட்டைக்காரர்கள் கோபமாய்க் கோஷம் போட்டுக் கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது. அதுக்குப் பிறகு, சில வருசங்கள் கழித்து கருப்புச் சட்டைக்காரர்கள் ரோசமாகக் கூவிக்கொண்டே அந்த சிறைச்சாலைக்குள் வந்த்தைப் பார்க்க முடிந்தது.
அதுக்கும் பிறகு, சில வருடங்கள் கழித்து, சாட்சாத் கதர்சட்டை போட்டவர்களே ஆவேசமாகக் கோஷம் போட்டு கொண்டே அதே சிறைச்சாலைக்கு வந்தார்கள்.
நாயக்கருக்கு அப்ப தான் தெரிந்தது; வெள்ளைக்காரன் எதோ ஒரு உருவத்தில் இங்கே இருக்கவே செய்கிறான். பீடை இன்னும் நாட்டை விட்டுப் போகலை!
மிக நீண்ட காலம் கழித்து அந்தமான் அழகிரி நாயக்கர் விடுதலை ஆனார். கருப்புத் தலையோடு போனவர் வெளுப்புத் தலையோடும் வாலிபனாய் போனவர் கிழவனாகவும் வெளியே வந்தார்.
வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது; ஊரில் வினோதமான பல மாற்றங்கள் நடந்திருக்கு என்று. அப்போது அவருடைய கிராமத்தில் யார் யாரெல்லாம் தீவிரமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தார்களோ அவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளாக மாறியிருந்தார்கள்.
சுதந்திரப் போராட்டத்தையும் காந்திஜியையும் யார் யார் இழிவாகவும் கேவலமாகவும் பேசினார்களோ அவர்களெல்லாம் அசல் காங்கிரஸ்காரர்களாகி கதர் உடுத்திக் கொண்டிருந்தார்கள்.
இது என்ன காலக் கொடுமையடா, முரட்டுக் கதர்ச் சட்டைகளெல்லாம் சிகப்புச் சட்டை, கருப்புச் சட்டைன்னு ஆயிட்டது.
கிளாஸ்கோ மல் எல்லாமே நைஸ் கதர்ச் சட்டையா மாறிட்டதே என்று சொல்லிச் சிரித்தார் அந்தமான்.
ஒருநாள், அந்தமான் நாயக்கருக்கு தாலுகா ஆபீஸ் போக வேண்டியிருந்தது. லோன் தாசில்தாரைப் பார்த்து, களைவெட்டுக்குக் கடன் வாங்.
கோவில்பட்டிக்கு பக்கத்து வீட்டு ஆண்டியப்பன் அவரோடு புறப்பட்டான். அவனும் களையெடப்புக்கு லோன் வாங்க வேண்டும்.
ஆண்டியப்பனுக்கு சக்கட்டி என்று ஒருபட்டப் பெயருண்டு. அவனக் எதிரே யாரும் அப்படிச் சொல்லி கூப்பிட மாட்டார்கள் . இருவரும் ரயில்க் கெடியைப் பார்த்து நடநதார்கள்.
அந்த வருசம் மழைகள் பரவாயில்லை. காடுகள் செழித்திருந்தன. பருத்திச் செடிகள் பார்க்க “துரைவீட்டுப் பிள்ளைகள் போல” தளதளவென்று இருந்தது. கொத்தமல்லிச் செடிகள் “பந்து பந்தாக” கரிசல் மண்ணிலிருந்து கிளம்பியிருந்தன. பூக்கிறதுக்கு முன்னாலேயே களைகளை வெட்டிவிட வேணும். சம்சாரிகளிடம் கையில் துட்டு இல்லை. எல்லாத்தையும் விதைப்பில் போட்டாச்சி. இப்போ “கார்த்திகை மாசம் கழுத்தாம்பிடி” யாக ஆகிவிட்டது. தூக்கிப்போட்டு மிதிச்சாலும் எவனும் முக்கால் துட்டு கொடுக்கமாட்டான்.
அரச களையெடுக்க லோன் தருவதாகச் சொல்லுகிறது. அது எது செய்தாலும் காலதாமதம் தான். கிணறு தீப்பிடித்து எரியும் வீடுகளை அணைக்க தகவல் சொல்லி அனுப்பினால் அதிகாரிகள் வந்து இடம் பார்ப்பார்கள்; எந்த இடத்தில் தோண்டலாம் (நெருப்பை அணைக்க) என்று வெள்ளைத் த்துரகள் ஆண்டு காலத்திலும் அதேதான். எதை மாத்தினாலும் இந்த ஊத்தை அதிகாரிகளை ஒண்ணுஞ் செய்ய முடியாது.
அதிகாரிகள் பிறக்கும்போதே தலையணையும் பாயுமாகத்தான் பிறக்கிறார்களாம். அதையே ஆபீஸுக்கும் கொண்டு வருகிறார்கள்.
சட்ட சபையிலேயே தூங்கலாம், குறட்டைதான் விடப்படாது என்று சொல்லுகிற காலம் என்பான் சங்கரப்ப்பன்.
களை என்பது பச்சை நிறத்துத் தீ. பயிர்களை விட வேகமாக வளர்ந்து பயிர்களுக்குண்டான ஈரத்தையும் உரத்தையும் சாப்பிட்டுவிடும்.
பயிர்க்களுக்குத்தான் நோய்களும், பூச்சிகளும்; களைகளுக்கு அதெல்லாம் கிடையாது. அவைகள் சிரித்துக் கொண்டே ஆலவட்டம் போட்டு வளரும். களைகளின் அபாயம் அதிகாரிகளுக்குப் புரியாது என்றெல்லாம் பேசிக் கொண்டே அவர்கள் ரயில்க் கெடியை அடைந்ததும், எதிர் திசையிலிருந்து ஒரு ரயில் வந்து, அடுத்த தண்டவாளத்தில் நின்றது; வருகிற ரயிலுக்கு வழிவிட்டு ரயிலைப் பார்க்கிறது எப்பவுமே ஒரு ஆனந்தம் தான். எத்தனை தபா பார்த்தாலும் திரும்பவும் திரும்பவும் பார்த்துக கொண்டேயிருக்கலாம். இந்த ரயிலு ஒண்ணு, யானை ஒண்ணு, யானை ஒண்ணு எத்தநெ தபா பார்த்தாலும் சலிக்காது, என்று ஆண்டியப்பன் குழந்தை போல சொன்னான்.
கெடியில் உள்ள இவர்களுக்குத் தெரிந்த போர்ட்டர், என்னெ இவ்வளவு காலையிலேயே டவுனுக்கு என்று கேட்டார். வி, ஓ வைப் பார்க்கத்தான் என்கிறார்கள்.
வில்லேஜ் ஆபிஸர் என்கிற வி.ஏ.ஓக்கள் கிராமங்களித் தங்குகிறதில்லை. தங்கியிருப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு டவுனில் தான் பெரும்பாலும் வாடகை வீடு பிடித்துக் குடியிருக்கிறார்கள். அவ்வளவுக்கும் கட்டுபடியாகிறது அவர்களுக்கு
வி.ஏ.ஓவைப் பார்த்தால் மட்டும் போதுமா; ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் பார்க்க வேணுமே சல்க்காரே அவருடைய மடியில் கிடக்கிறது போலத்தான்.
பாத்துக்கொ; வெள்ளைக்காரன் கிழிச்ச கோட்டை நம்மவர்களால் தாண்ட முடியலை என்றார் அந்தமான்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26/10/2018

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...