Wednesday, October 10, 2018

தற்சார்பு விவசாயம் – 4 பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.


தற்சார்பு விவசாயம் – 4
பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.
நம்முடைய பாரம்பரிய விதைநெல்களை கவனமாக விவசாயக் குடும்பங்களில் பாதுகாப்பார்கள். அதை மூட்டைகளில் தனியாக கட்டி வேறு தானியங்கள், பருத்தி, மிளகாய் பக்கத்தில் அண்டாமல் கண்ணுங் கருத்துமாக ஈரம்படாமல் தனியறையில் பாதுகாப்பது வாடிக்கை. சில இடங்களில் விவசாயிகளுக்கு இடப்பற்றாக்குறை என்றால் பொதுவான பாரம்பரிய விதைநெல் கோட்டைகளிலும் தனித்தனியாக பாதுகாப்பதும் உண்டு. இவை ஆதிகாலத்திலிருந்து நடைமுறையில் உள்ள முறையாகும். இப்போது அத்தகைய வழக்கங்கள் இன்றைக்கு இல்லாமல் ஆகிவிட்டன. குறிப்பாக கலப்பட நெல் விதைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டதால் கவனத்தோடு விதைநெல்களை பராமரிக்கும் பாடுகள் நம்மைவிட்டு தொலைந்துவிட்டன. நான் அறிந்த வகையில், தாமிரபரணி பாசனம், வைகை பாசனம், காவிரி டெல்டாவில் இது போன்ற வாடிக்கைகள் தொன்றுதொட்டு இருந்தது.
பண்டைய நெல் சாகுபடியில் முக்கிய இடம் வகித்தவை தான் விதைநெல் கோட்டைகள். நமது விவசாயிகள் விதை நெல்லை பதப்படுத்தி, பக்குவமாக சேமித்து வைக்கும் பழக்கத்தை காலம் காலமாக மேற்கொண்டிருந்தனர்.
அறுவடைக் காலங்களில் நன்றாக விளைந்த நெல் வயலிலிருந்து பிற வகை நெல் கலக்காமல் விதைநெல்லை பிரித்தெடுக்க நெற்கதிர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு தேர்ந்தெடுத்த நெற்கதிர்களை மட்டும் களத்து மேட்டில் தனியாக போரடித்து விதை நெல்லை பிரித்தெடுப்பர். அதனை மிதமான வெயிலிலும், நிழலிலும் இரண்டு, மூன்று நாட்கள் காய வைத்து பதப்படுத்துவார்கள். அவ்வாறு காய்ந்த விதை நெல்மணிகளை பதப்படுத்திய பின்னர் அவற்றை கோட்டையில் கட்டுவர்.
பிரி என்பது சுத்தமான நெல் நீக்கப்பட்ட வைக்கோலைக் குறிப்பிடுவதாகும். இதனை கயிறு போல பயன்படுத்தி அதன் மீது வைக்கோலை பரப்பிய பின்னர் காயவைத்து பதப்படுத்திய விதை நெல்மணிகளை அதன் மீது கொட்டுவர். பின்னர் வைக்கோலை பந்து போல சுருட்டி, அந்த பிரிகளை கொண்டு இழுத்து கட்டப்படும். அதன் மேல் பசுவின் சாணத்தை கொண்டு மெழுகுவர். வெயிலில் நன்றாக காயவைத்த பின்னர் அந்த கோட்டைகளை வீட்டினுள் காற்று புகாத அறையில் அடுக்கி வைப்பார்கள்.
ஒரு கலம் என்பது 12 மரக்கால், ஒன்றரைக் கலம் என்பது 18 மரக்கால், இரண்டு கலம் என்பது 24 மரக்கால் ஆகும். இவ்வாறு பல்வேறு அளவுகளில் கோட்டைகள் கட்டப்பட்டு விதைநெல் வைக்கோலின் கதகதப்பான தட்பவெப்ப நிலையில் பராமரிக்கப்படும். பசும் சாணம் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கும். இத்தகைய விதைநெல் கோட்டைகளை அடுத்த பருவ சாகுபடி வரை பத்திரமாக வைத்திருப்பர்.
பருவ மழைக் காலத்திற்குப் பிந்தைய சாகுபடி காலம் துவங்கியவுடன் அந்த விதைநெல் கோட்டைகளை அந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளான குளம், குட்டை, கண்மாய், ஊருணி போன்றவற்றில் போட்டு ஊற வைப்பார்கள். நன்றாக ஊறிய பின்னர் அந்த நெல் கோட்டைகளை கரையேற்றி நீரை வடிய வைத்து நாற்றாங்கால் வயலுக்கு தூக்கி செல்லப்படும். நீரில் மூழ்கிய விதை நெல்மணிகள் நன்றாக முளைவிட்டிருக்கும். இயற்கை பொருட்கள், தாவர இலைகள் கொண்டு பதப்படுத்திய வயலில் நெல் விதைகள் தூவப்படும். இரண்டு, மூன்று நாட்களில் அவை முளைக்கத் துவங்கும்.
விவசாயிகள் குடும்பங்களில் தங்களின் தேவைக்கும், விற்பனைக்கும் போக மீதமிருக்கும் நெல்லை நெல்கோட்டைகளிலும் பொதுவாக சேமித்து வைக்கும் சத்திரம் போன்ற கட்டிடங்களிலும் மூட்டை கட்டி வைப்பது வாடிக்கை. சிலர் தங்களுக்கு விதைநெல் இல்லையென்றால் இங்கு வந்து கேட்பது அந்த காலத்து வாடிக்கை.
துதான் நமது பாரம்பரிய நெல் வகைகள்

  1. அன்னமழகி
  2. அறுபதாங்குறுவை
  3. பூங்கார்
  4. கேரளா ரகம்
  5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)
  6. குள்ளங்கார்
  7. மைசூர்மல்லி
  8. குடவாழை
  9. காட்டுயானம்
  10. காட்டுப்பொன்னி
  11. வெள்ளைக்கார்
  12. மஞ்சள் பொன்னி
  13. கருப்புச் சீரகச்சம்பா
  14. கட்டிச்சம்பா
  15. குருவிக்கார்
  16. வரப்புக் குடைஞ்சான்
  17. குறுவைக் களஞ்சியம்
  18. கம்பஞ்சம்பா
  19. பொம்மி
  20. காலா நமக்
  21. திருப்பதிசாரம்
  22. அனந்தனூர் சன்னம்
  23. பிசினி
  24. வெள்ளைக் குருவிக்கார்
  25. விஷ்ணுபோகம் [19]
  26. மொழிக்கருப்புச் சம்பா
  27. காட்டுச் சம்பா
  28. கருங்குறுவை
  29. தேங்காய்ப்பூச்சம்பா
  30. காட்டுக் குத்தாளம்
  31. சேலம் சம்பா
  32. பாசுமதி
  33. புழுதிச் சம்பா
  34. பால் குடவாழை
  35. வாசனை சீரகச்சம்பா
  36. கொசுவக் குத்தாளை
  37. இலுப்பைப்பூச்சம்பா
  38. துளசிவாச சீரகச்சம்பா
  39. சின்னப்பொன்னி
  40. வெள்ளைப்பொன்னி
  41. சிகப்புக் கவுனி
  42. கொட்டாரச் சம்பா
  43. சீரகச்சம்பா
  44. கைவிரச்சம்பா
  45. கந்தசாலா
  46. பனங்காட்டுக் குடவாழை
  47. சன்னச் சம்பா
  48. இறவைப் பாண்டி
  49. செம்பிளிச் சம்பா
  50. நவரா
  51. கருத்தக்கார்
  52. கிச்சிலிச் சம்பா
  53. கைவரச் சம்பா
  54. சேலம் சன்னா
  55. தூயமல்லி
  56. வாழைப்பூச் சம்பா
  57. ஆற்காடு கிச்சலி
  58. தங்கச்சம்பா
  59. நீலச்சம்பா
  60. மணல்வாரி
  61. கருடன் சம்பா
  62. கட்டைச் சம்பா
  63. ஆத்தூர் கிச்சிலி
  64. குந்தாவி
  65. சிகப்புக் குருவிக்கார்
  66. கூம்பாளை
  67. வல்லரகன்
  68. கௌனி
  69. பூவன் சம்பா
  70. முற்றின சன்னம்
  71. சண்டிக்கார் (சண்டிகார்)
  72. கருப்புக் கவுனி
  73. மாப்பிள்ளைச் சம்பா
  74. மடுமுழுங்கி
  75. ஒட்டடம்
  76. வாடன் சம்பா
  77. சம்பா மோசனம்
  78. கண்டவாரிச் சம்பா
  79. வெள்ளை மிளகுச் சம்பா
  80. காடைக் கழுத்தான்
  81. நீலஞ்சம்பா
  82. ஜவ்வாதுமலை நெல்
  83. வைகுண்டா
  84. கப்பக்கார்
  85. கலியன் சம்பா
  86. அடுக்கு நெல்
  87. செங்கார்
  88. ராஜமன்னார்
  89. முருகன் கார்
  90. சொர்ணவாரி
  91. சூரக்குறுவை
  92. வெள்ளைக் குடவாழை
  93. சூலக்குணுவை
  94. நொறுங்கன்
  95. பெருங்கார்
  96. பூம்பாளை
  97. வாலான்
  98. கொத்தமல்லிச் சம்பா
  99. சொர்ணமசூரி
  100. பயகுண்டா
  101. பச்சைப் பெருமாள்
  102. வசரமுண்டான்
  103. கோணக்குறுவை
  104. புழுதிக்கார்
  105. கருப்புப் பாசுமதி
  106. வீதிவடங்கான்
  107. கண்டசாலி
  108. அம்யோ மோகர்
  109. கொள்ளிக்கார்
  110. ராஜபோகம்
  111. செம்பினிப் பொன்னி
  112. பெரும் கூம்பாழை
  113. டெல்லி போகலு
  114. கச்சக் கூம்பாழை
  115. மதிமுனி
  116. கல்லுருண்டையான் (கல்லுருண்டை)
  117. ரசகடம்
  118. கம்பம் சம்பா
  119. கொச்சின் சம்பா
  120. செம்பாளை
  121. வெளியான்
  122. ராஜமுடி
  123. அறுபதாம் சம்பா
  124. காட்டு வாணிபம்
  125. சடைக்கார்
  126. சம்யா
  127. மரநெல்
  128. கல்லுண்டை
  129. செம்பினிப் பிரியன்
  130. காஷ்மீர் டால்
  131. கார் நெல்
  132. மொட்டக்கூர்
  133. ராமகல்லி
  134. ஜீரா
  135. சுடர்ஹால்
  136. பதரியா
  137. சுதர்
  138. திமாரி கமோடு
  139. ஜல்ஜிரா
  140. மல் காமோடு
  141. ரட்னசுடி
  142. ஹாலு உப்பலு
  143. சித்த சன்னா
  144. வரேடப்பன சேன்
  145. சிட்டிகா நெல்
  146. கரிகஜவலி
  147. கரிஜாடி
  148. சன்னக்கி நெல்
  149. கட்கா
  150. சிங்கினிகார்
  151. செம்பாலை.
  152. மிளகி
  153. வால் சிவப்பு.
  154. தூயமல்லி சம்பா
  155. சித்திரக்காலி 
  156. சிறைமீட்டான்
  157. செஞ்சம்பா
  158. கருஞ்சூரை
  159. முத்துவிளங்கி
  160. மலைமுண்டன்
  161. பொற்பாளை
  162. நெடுமூக்கன்
  163. அரிக்கிராவி
  164. மூங்கில் சம்பா
  165. கத்தூரிவாணன்
  166. இரங்கல் மீட்டான்
  167. பாற்கடுக்கன்
  168. புத்தன்
  169. புனுகுச் சம்பா
  170. கஸ்தூரி சம்பா
  171. குணாசம்பா
  172. குண்டுமணி சம்பா
  173. கீர சம்பா
  174. கல்லன் சம்பா
  175. கட்டு குறுவா
  176. இடார்ப்ப குறுவா
  177. இமி குறுவா
  178. கரி குறுவா
  179. குல குறுவா
  180. பனம் குறுவா
  181. அறுவாள் குறுவா
  182. காடகழுத்தான்
  183. விலங்கன்
  184. மானாவாரி
  185. மருதவேளி
  186. கரிமுலாக்கி
  187. ஜீரகமுலாக்கி
  188. எவன்ன முலாக்கி
  189. மஞ்சமுலாக்கி
  190. காற்றாடி முத்தான்
  191. காற்றுகாரிமைணன்
  192. விரியன்
  193. சிறலாகி
  194. கருத்த அரிவிக்குருவி
  195. குறுவகழையான்
  196. ஆனகொம்பன்
  197. புழுதிபெரட்டி

இப்படி விதைநெல்லை இன்னும் பலவகைப் பெயர்களில் அழைப்பதுண்டு.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09/10/2018.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#தற்சார்பு_விவசாயம்
#மரபுரீதியான_விவசாயம்

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...