Wednesday, September 4, 2024

*வழக்கறிஞர் தொழிலுக்கே அவமானம்.. மனுதாரரை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியது சென்னை ஐகோர்ட்*

 *வழக்கறிஞர் தொழிலுக்கே அவமானம்.. மனுதாரரை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியது சென்னை ஐகோர்ட்*


சென்னை: வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்கள். இதில் கடந்த 2008 ஆம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, அந்த வழக்கில் 3 வழக்கறிஞர்கள் கைது செய்யபட்டனர்.


2011 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் வழக்கறிஞர் சதிஷ்குமார் படுகொலை செய்யப்பட்டு இதுவரை கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ வழக்கில் தெரியாத நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது.


2013 ஆம் ஆண்டு தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற பணியை முடித்து வீடு திரும்பிச் சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து சாலையில் வைத்து கொடுரமான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


பழிக்கு பழி சம்பவமாக சேலம், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நடராஜன், கடந்த 2013 ஆம் ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழி தீர்க்கும் சம்பவமாக கடந்த 2014 ம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த வழக்கறிஞர் நித்தியானந்தம் என்பவரை, 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது.


நாயுடன் இரவில் வாக்கிங் சென்ற வழக்கறிஞர் மதியழகன் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சண்முகம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் வெற்றியை கொண்டாடிய வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்டார். மாமல்லபுரத்திற்கு வழக்கு தொடர்ந்தவருடன் சென்ற வழக்கறிஞர் கமலேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இதே போல், இந்தாண்டு மட்டும் கடந்த மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் ஜெய் கணேஷ், தென்காசி வழக்கறிஞர் அசோக்குமார், துத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமாரை தொடர்ந்து கடந்த ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வரை 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வழக்கறிஞர் தொழிலுக்கு அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர் தொழில் மீதான நம்பக தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளத.


வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதை தடுக்க

வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி மற்றும் 18 ம் தேதிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறி சென்னையை சேர்ந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் படுகொலை தொடர்பாக சில வழக்குகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சில வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறை சட்டத்தை அமல்படுத்தக்கோரி மத்திய அரசிடம் புதிய மனு அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்...

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...