Thursday, May 28, 2026

வாய்ப்புகள் மறுக்கப்படும் போதெல்லாம்

 வாய்ப்புகள் மறுக்கப்படும் போதெல்லாம்

எனக்கான ஒரு பெரும் சுவர் யாரோ ஒருவரால் உயர்த்திப் கட்டப்படுகிறது காலம் எனக்கும் முன்பே வெகுதூரம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது, நான் மட்டும் நின்றுகொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தைப் போல உறைந்து கிடக்கிறேன். ​என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்கிற எண்ணம் எப்போதும் ஒரு கசப்பான மருந்தைப் போல என் நாவிலேயே தங்கியிருக்கிறது. அப்போதுதான் எனக்குள்ளே நான் கொஞ்சம் கொஞ்சமாய் தளர்கிறேன்... உடைந்து போகிறேன்... ஒரு பழைய கட்டிடம் பெயர்ந்து விழுவதைப் போல ஏதோ ஒன்று என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறது. ​ஒரு கட்டத்தில் ‘போதும்’ என்கிற ஒற்றைச் சொல் ஒரு நீண்ட பெருமூச்சாய் காற்றில் கரைகிறது. அப்போது நான் செய்வதெல்லாம் கண்களை மூடிக்கொள்வது மட்டும்தான். ​அந்த இருளுக்குள் எந்தப் புகார்களும் இல்லை, மறுக்கப்பட்ட வாய்ப்புகளின் வலி இல்லை. அப்படியே சில நிமிடங்கள்... ஒரு பிணத்தைப் போல மௌனமாக இருக்கிறேன். ​ஆனால், ஆச்சரியம் அதுவல்ல. மறுபடியும் நான் கண்களைத் திறக்கிறேன். யாரும் சொல்லாமலேயே மீண்டும் என் கால்கள் ஓடத் தொடங்குகின்றன. புழுதி படிந்த அதே பாதையில் புதிய வேகத்தோடு நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ​நான் ஏன் இவ்வளவு வினோதமாக இருக்கிறேன்? அநேகமாக இந்த உலகத்தின் தர்க்கங்களுக்குப் புரியாத ஒரு ரகசியக் காயத்தை நான் எனக்குள்ளே ஆராதித்துக் கொண்டிருக்கிறேன் போலும்.



No comments:

Post a Comment

MSY 15