Tuesday, October 10, 2017

War Memorial / போர் நினைவுச் சின்னத்தின் நிலையைப் பாரீர்.

சென்னை தலைமைச் செயலகம் அருகில் கடற்கரை, காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் (War Memorial) சென்னை மாநகரின் அடையாளமாக விளங்குகின்றது. இதற்கு 70 ஆண்டு வரலாறு உண்டு. நேற்றைக்கு வழக்கறிஞர்களாக இருந்த சகாக்கள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள். என் தாயாரின் மறைவைக் குறித்து துக்கம் விசாரிக்க வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது பழைய நட்பு ரீதியான விஷயங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்த போது சென்னை கடற்கரை போர் நினைவுச் சின்ன கல் சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளன. நீண்ட நாட்களாக கண்ணில்படுகிறது. அதை அகற்ற யாருக்கும் மனம் வரவில்லையோ என்று சொன்னார்கள். இன்றைக்கு அந்த வழியாக நான் பயணிக்கும் போது இதை நேரில் கண்டேன். 



இந்த மூன்று படங்களில் சிகப்பு வளையமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் தேவையற்ற செடிகள் வளர்ந்துள்ளதை வெட்டி அப்புறப்படுத்த யாருக்கும் மனம் வரவில்லையே என்று வருத்தத்தை தந்தது. நாட்டின் விடுதலைப் பெருநாள் சமீபத்தில் தான் முடிந்துள்ளது. அந்த விழாவின் போது கடற்கரைச் சாலை சீர்படுத்துவதுண்டு. அப்படி செய்கையில் இது கூட கண்ணில் படவில்லையா என்பது தான் நமது வினா. 

அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்ற முக்கியப் பிரமுகர்கள் செல்லும்போது அவர்களின் கண்ணில் இது படுவதில்லையா? அப்படி கண்ணில் பட்டாலும் இதை விட வேறு முக்கிய அலுவல்கள் இருக்கின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கடந்த 2014ல் இதே போன்று அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் செடிகள் வளர்ந்து பாலத்தை பாதிக்கும் என்று புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவும் செய்திருந்தேன். அதை குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பிய பின்பு, நீண்டகாலம் கழித்து அந்த செடிகள் காணாமல் போனது. சிங்காரச் சென்னை என்பது இது தான். 

#போர்_நினைவுச்_சின்னம்
#war_memorial
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/10/2017

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...