Thursday, May 10, 2018

பாலாறு பாழாகின்றது

இப்பிரச்சனை குறித்து டெல்லியில் கூடிக் கலைந்தார்கள் தமிழக – ஆந்திர அதிகாரிகள். வெட்டிச் செலவும், நேர விரயமும். அவ்வளவு தான்
...............................
பாலாறு பிரச்சனை குறித்து டெல்லியில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் முன்னிலையில் தமிழக, ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளின் கூட்டம் கடந்த 07/05/2018 அன்று நடைபெற்றது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய நீர் அணையத் தலைவர் மசூத் ஹாசன், தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்ரமணியன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதே போல கூட்டத்தில் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாநிலங்களுக்கடையே ஆன பெரிய, நடுத்தர நீர்பாசனத் திட்டங்கள் தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார ஆய்வை மத்திய நீர் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாலாறு படுகையில் மேற்கொள்ளப்பட்ட நீர்பாசனத்திட்டம் தொடர்பான விவரங்களை பகிர்ந்துக் கொள்ளவும், கூட்டத்தில் விவாதிக்கவும் கோரப்பட்டது. இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2016இல் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. இதன் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்கள் தங்களது நிலைப்பாட்டினைத் தெரிவித்தன. நீர்ப்பாசனத் திட்டங்கள் தேவை என்று ஆந்திர அரசு தெரிவித்தது. எங்களிடம் பாலாற்றில் எங்களிடம் தண்ணீர் இல்லையென கைவிரித்தது. ஆனால் இந்த நீர்பாசனத் திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்து. எனவே கூட்டத்தில் எந்தவித சுமுகத் தீர்வும் எட்டப்படவில்லை. கூட்டத்தில் சுமூகத்தீர்வு எட்டப்படாததை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தீர்பு காண்பது என மாநிலங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படித்தான் எல்லா நதிநீர் பிரச்சனைகளுக்கும் கூடிக் கலைவது. அவர்களுக்குகென்ன அதிகாரிகள். விமானத்தில் பறந்து, மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்து ஊரைச் சுற்றுகிறார்கள். பல அதிகாரிகளுக்கு பாலாறு குறித்தான பிரச்சனைகளே தெரியாமல் கூட்டத்தில் அமர்ந்து ஏதோ பேசவேண்டுமென்று பேசிவிட்டு வருகிறார்கள்.

இந்த பாலாறு தொடர்பாக 1882இல் அப்போதைய மெட்ராஸ் அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு அதன்மீது நீராதிபத்தியம் உண்டு. இப்போது என்ன பிரச்சனை என்றால் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் என்ற இடத்தில் ஆந்திர-தமிழக எல்லையில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தடுப்பணை உயரத்தை 12 அடிக்கு உயர்த்தியது. அதே போல குப்பம் வட்டத்தில் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா 2006இல் தடுப்பணை கட்டியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2016இல் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

#பாலாறு
#Palar_River
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


09-05-2018

No comments:

Post a Comment