Wednesday, December 18, 2019

*#அவசியப்_பார்வைக்கு #குடியுரிமை_சட்டமும் #ஈழத்தமிழர்_சிக்கலும்

*#அவசியப்_பார்வைக்கு
#குடியுரிமை_சட்டமும் 
#ஈழத்தமிழர்_சிக்கலும்*
———————————————-
இந்திய குடியுரிமை சட்டப் பிரச்சினையில் இந்தியா இன்று கொழுந்து விட்டு எரிகின்றது. 

இதில் #ஈழத்_தமிழர்கள் பிரச்சினையில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் உள்ளன. 1983 கலவரத்திற்கு பின் இலங்கைத் தமிழருடைய மக்கள் தொகை இலங்கையில்  குறைந்து வருகின்றது. இலங்கையில் தமிழர்கள் அந்நாட்டின் பூர்வீக மக்கள், அவர்களின் பூர்விகமான நாடு (traditional homeland) என்ற நிலையில் தமிழர்களுடைய உரிமைப் பிரச்சினைக்கு பாதகமில்லாமல் இப்பொழது அணுக வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

இன்றைக்கு ராஜபக்சே சகோதரர்கள் இந்த தருணத்தை தவறாக பயன்படுத்தி சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்த 1964 காலத்தில் ஏற்பட்டது போல சிக்கல் வராமல் அணுக வேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டது இன்று வரை அவர்களுடைய உரிமைகளும் பறிக்கப்படுகின்ற நிலையில் ஈழத்தில் உள்ள தமிழர்களுடைய மக்கள்தொகை எண்ணிக்கை சரிவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும்.

ஈழ அகதிகள் இந்தியாவில் குடியுரிமை வேண்டும் என்று விருப்பபடுவர்களுக்கு அவசியம் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இங்குள்ள அகதிகள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்களிடம் இந்தியாவில் வாழ்ந்த காலத்திற்கான கட்டணத்தை  வசூலிக்காமல் பாதுகாப்பாக,எளிதாக இலங்கைக்கு அனுப்பி வைப்பது இந்திய அரசின் கடமையாகும்.

அப்படி இலங்கைக்கு திரும்பியவர்களை தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாநிலங்களில் நிம்மதியாக வாழ இலங்கை அரசிடம் இந்திய அரசு உத்திரவாதத்தையும் பெற வேண்டும்.

இலங்கையில் 1983 இனக்கலவரத்திற்கு பிறகு இந்தியாவுக்கு வந்து இங்கே தொழில், உறவு ரீதியாக வாழ்கின்றவர்களுக்கு அவசியம் இந்திய அரசு குரியுரிமை வழங்க வேண்டியது ஐநா மனித உரிமை சாசனத்தின் கீழும், சர்வதேச சட்டங்களின் படியும் உரிமை உண்டு என்று இந்திய அரசு கவனிக்க வேண்டும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.12.2019

#ஈழத்தமிழர்
#இந்திய_குடியுரிமை_சட்டம்
#ksrposts
#ksradhakrishnanposts


No comments:

Post a Comment