கா.சு. பிள்ளை
தமிழறிஞர் பேராசிரியர், வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர், சைவ சித்தாந்தச் சிந்தையாளர், தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் தேர்ந்த பன்மொழிப்புலவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் கா.சு.பிள்ளை. அந்தக் காலத்தில், கல்கத்தாவில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பெயரில் அமைந்த விருதைப் பெறவேண்டும் என்றால், தேர்ந்த சட்டத் தலைப்பு ஒன்றில் பன்னிரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. பேராசிரியர் கா.சு.(பிள்ளை) அவர்கள், கல்கத்தா சென்று ‘குற்றங்களின் நெறி முறைகள்’ என்ற தலைப்பில் பன்னிரண்டு சொற்பெருக்காற்றி தாகூர் விருதைப் பெற்றுத் திரும்பினார். இவ்விருது பெற்ற ஒரே தமிழர் இவர் மட்டும்தான். தமிழ் இலக்கியம், சமயம் மற்றும் சட்டத்துறை சார்ந்த ஏராளமான நூல்கள் எழுதியவர் கா.சுப்பிர மணிய பிள்ளை. திருநெல்வேலி டவுனில் 1888-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிறந்தார். பொதிகை மலை; பொருநை நதி; பொன்னான நெல் விளையும் புண்ணிய பூமி போன்றவற்றை ஒருங்கே கொண்ட திருநெல்வேலியில் காந்திமதிநாதப் பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கா.சுப்பிரமணியப் பிள்ளை. இவருடைய, தந்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பி.ஏ. பட்டம் பெற்று, ‘பி.ஏ. பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர். அவருடைய வாரிசாக உருவான கா.சு.பிள்ளை, தன்னுடைய ஆரம்பக் கல்வியை நெல்லையில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றார். இவர் படித்த காலத்தில், தங்கிய இடத்தில் மணியடித்துச் சிவ பூஜை செய்துவந்ததால், இவருக்குப் பூஜைப் பிள்ளை என்ற பெயரும் உண்டு. 1902-ம் ஆண்டு அரசின் நடுத்தரத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றதால், மற்ற வகுப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டது. மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்விலும் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்விலும் மாநில அளவில் இவர் முதலிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்றபோதுதான், ‘பவல்மூர்கெட்’ என்ற ஆங்கிலப் பெரியார் அமைத்த தமிழாராய்ச்சி நிறுவனப் பரிசைப் பெற்றார். ‘‘சுப்பிரமணியனுக்குப் பாடப்புத்தகமே தேவையில்லை!’’ மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த உ.வே.சா., ‘‘சுப்பிரமணியனுக்குப் பாடப்புத்தகமே தேவையில்லை’’ என்று ஏனைய மாணவர்களிடம் தன் மாணவன் கா.சு.பிள்ளையைப் பற்றிப் புகழ்ந்துரைப்பாராம். காரணம், கா.சு.பிள்ளை 1,000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைக் கூட சில மணி நேரங்களில் படித்து முடித்து விடுவாராம். எதையும் ஒரு தடவை படித்து விட்டால், அதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வாராம். அதனால்தான் அவர், Photographic Mind என்று அழைக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், ‘கலைப் பேரறிஞர்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார். ‘எம்.எல்’ பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் கா.சு.பிள்ளை என்பதால், தன் தந்தையைப்போலவே இவரும், ‘எம்.எல். பிள்ளை’ என்று பலராலும் அழைக்கப்பட்டார். 1920-ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய அகில இந்திய அளவிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ‘குற்றவியலின் நெறிமுறைகள்’ என்ற கட்டுரையை அளித்தார். அவரது கட்டுரைக்கு ரூ.16,000 பரிசு கிடைத்தது. அத்துடன், ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ என்ற விருதும் கிடைத்தது. சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் பெரும் பதவி பெற வாய்ப்பு இருந்தும் அதை ஏற்க மறுத்தார் கா.சு.பிள்ளை. அதற்குக் காரணம், அவர் சார்ந்திருந்த நீதிக்கட்சி மீதான பித்து என்று அவர் மீது நன்மதிப்பு வைத்த அறிஞர்கள் பலரும் அங்கலாய்த்தனர். இதனால் கா.சு.பிள்ளை தன்னுடைய வாழ்வில் வளர்ச்சி அடையாமல் போனாலும் தமிழ்மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றிய கா.சு.பிள்ளை, தமிழ் மீது பற்று கொண்டிருந்த பல மாணவர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவர்களைத் தமிழ்ச் சான்றோர்களாக்கினார். 1929&1930ஆம் ஆண்டு, 1940&1941ஆம் ஆண்டு, 1943&1944ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கேதான் நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் இருவரும் பேராசிரியர் கா.சு.பிள்ளையிடம் மாணவர்களாகப் பயின்றனர். தமிழர் என்பவர் எவர்? 1937-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டு கா.சு.பிள்ளை ஆற்றிய உரை, தமிழக அரசியலில் நிலையான மொழிக் கொள்கையை வகுத்திடக் காரணமாக இருந்தது. நெல்லையைச் சேர்ந்த நாயகம் பிள்ளையின் மகள் பிரமு அம்மாளை திருமணம் செய்து கொண்டார். ‘செந்தமிழ்ச்செல்வி’ என்ற இதழில் பல கட்டுரைகளை எழுதினார்.Tuesday, May 12, 2026
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment