Wednesday, June 19, 2019

வெவசாயத்துல அப்பப்ப சலிப்பு வரும் எதையாவது ஒரு வெள்ளாமைய பண்ணுவோம்.

வெவசாயத்துல அப்பப்ப சலிப்பு வரும் எதையாவது ஒரு வெள்ளாமைய பண்ணுவோம்.அது வீடு வந்து சேருறப்ப
வெலையிருக்காது.அதுக்காக மொத்தக்
குடும்பமே படாத பாடுபட்டு கொண்டாந்து
சேர்த்து வெலையில்லைன்னா வெறுப்பு, ஒரு சலிப்பு வர்றது சகஜம்.
இந்த மாதிரி வேளைகள்ல சக சம்சாரிக,பக்கத்தூர்ல இருந்து வந்து போற யேவாரிக,மாட்டுத்தரகர்க,சம்சாரிக
கிட்ட நம்ம பாடு பஞ்சிய பேசுறப்ப அவுக புதுசா ஏதாவது ஒரு தகவல்கள சொல்வாக.
புலிப்பாறைப்பட்டி சம்சாரிக மானாவரியில அவுரியும்,தோட்டக்காட்டுல நித்தியக்கல்யாணிய போட்டுருக்காக பாருங்க.நல்ல மகசூல் வெலைவாசியும்
நல்லாருக்கு.யேவாரிகளும் பிரியக்காலா
தேடி வந்து வாங்குறாக சாமின்னுட்டு
போயிருவாக.
Image may contain: one or more people, tree, outdoor and nature
மறு நாத்தே இங்கயிருந்து ஒரு சம்சாரி
புலிப்பாறைப்பட்டிக்கு போயி யாராவது
சொந்த பந்தம் இல்லை சிநேகிதங்கள்
கிட்ட என்னா பக்குவம் வெள்ளாமை எப்படி பண்றதுன்னு வெவரத்தையும் கேட்டு ரெண்டு கெலொ வெதையோட வந்து சேந்துருவாப்புல.
அப்புறம் நித்தியக்கல்யாணியோ,அவுரியோ
இந்த ஊருக்கு வந்துரும்.அப்புறம்
பக்கத்து தோட்டதத்துக்காரக,பக்கத்து வீட்டுக்காரவுக . சம்சாரிக எப்பவுமே பக்கத்து தோட்டத்துக்காரன் என்னா மருந்தடிக்கான்.என்னா ஒரம் வைக்கான்.என்னா வெதை போடுறான் .இதுல ஒரு கண்ணா இருப்பான்.இல்லை தூக்கம் வராது.இப்படியே ஆளுக்கு
ஆளு கொஞ்சம் கொஞ்சம் போட
ஆரம்பிச்சி கொஞ்ச நாளைக்கு அது ஓடும்.
பெறகு யேவாரிக அதை சீந்த மாட்டாத
நெலமை வரும். அப்புறம் ஒரு சலிப்பு
அப்புறம் ஒரு மாற்றம் வரும்.
இப்படித்தான் ஊரே அவுரிய போட்டுட்டு
வாங்க ஆளு கெடைக்காம தவிச்சி
கெடந்த காலமெல்லாம் உண்டு.நித்திய
கல்யாணி நெலமையும் ஒரு கட்டத்துல
அப்படி ஆகிப்போச்சு.
சம்சாரி வாழ்க்கை ஒரு சூதாட்டம் மாதிரி
வெலையும் வாச்சி மகசூலும் அமைஞ்சு நல்லா வந்துச்சின்னா யோகம் தான்.லாட்டரி சீட்ல பிரைஸ் அடிச்ச மாதிரி தான்.அதே மாதிரி தான் அஞ்சு லட்சம் ஒத்த ஒத்த ரூபாயா செலவழிச்சி வாங்கி ஏமாந்து என்னைக்கோ ஒரு நாள் ஒரு லட்சம் பரிசு கெடைச்சி சந்தோஷப்பட்டா மாதிரி தான்
அதுக்கு முன்னால அஞ்சு லட்சம் ரூபா
உடலுழைப்பு வீணாயிருக்கும்.இந்த
சூதாட்டத்துல.அதை நெனைச்சே பாக்க
மாட்டோம்.உருண்டுட்டே கெடப்போம்.
அப்புறம் ஒரு செய்தி.
நித்திய கல்யாணி வெவசாயம் பண்ணுற காலத்துல பெரியவங்க. அது
வெஷப்பயிருன்னு சின்னப்பிள்ளைகல
அந்தப் பூவ கூட தொட விட மாட்டாக.அந்த பக்கமே போக விட மாட்டாக.
முந்தா நாள் ஒரு நண்பர் அவர்கிட்ட
அவரின் மனைவி உடல் நலன் பற்றி விசாரிக்குறப்ப அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர் அவர் கையில இருந்த கவர்ல நித்தியக்கல்யாணி
பூவ வச்சிருந்தாரு. அதைப்பத்தி விசாரிக்க புற்று நோயாளிகளின் உடம்பில் ரத்தத்தில் வெள்ளை அணுத்தட்டுக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைவதை
ஈடு செய்கிறதாம்.நோய் எதிர்ப்பு
சக்தியை அளிக்க அவசியமாம். இந்த
வெள்ளை அணுத்தட்டுக்கள்.
இந்த நித்தியக்கல்யாணி பூ இதை அஞ்சாறு பூவெடுத்து ஒரு டம்ளர் தண்ணியில போட்டு காச்சி சுண்ட வச்சி
ஆற வச்சிக் கொடுத்து ரத்தத்தை சோதித்துப் பாத்ததில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக சொன்னார்.ஒரு நாள் விட்டு ஒரு நாள்
கொடுத்து வருவதாகவும் நல்ல பலன்
கிட்டுவதாக சொன்ன தகவல் ஆச்சரியமாய் இருந்தது.
நாங்க வெஷம்னு நெனைச்சிக்கிட்டுறந்ததை அவருக்கு மருந்தா பயன்படுகிறது என்கிற செய்தி வியப்பான மகிழ்வானதொரு செய்தி.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...