Monday, April 6, 2026

ஆபூர்வ சித்தர் - பேப்பர் சுவாமிகள் !

 ஆபூர்வ சித்தர் - பேப்பர் சுவாமிகள் !

---------------------------------------- பேப்பர் சுவாமிகளின் ஆரம்ப கால வாழ்க்கை ஒரு புதிரான, ஆன்மீகத் தேடல் நிறைந்த பயணமாகும். சித்தர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை மறைப்பதே வழக்கம், சுவாமிகளின் பிறப்பு மற்றும் இளமைப் பருவம் குறித்து அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் இல்லை. ஆனால் அவர் தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகிலுள்ள 'இலஞ்சி' என்ற ஊரில் நீண்ட காலம் தவம் இருந்தார் என்பது உறுதியான தகவல். அவர் அங்கிருந்து கிளம்பி பல இடங்களுக்குப் பயணம் செய்த பின்னரே கோவில்பட்டி பகுதிக்கு வந்து சேர்ந்தார். இவருடைய இயற்பெயர், பெற்றோர் அல்லது பிறந்த ஊர் பற்றித் தெளிவான குறிப்புகள் இல்லை. சித்தர்களின் மரபுப்படி இவரது பின்னணி ஒரு ரகசியமாகவே உள்ளது. ஆரம்பத்திலிருந்தே அவர் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுத் திகழ்ந்தார். கையில் எப்போதும் ஏதேனும் பழைய நாளிதழ்களைச் வைத்திருப்பார். சில நேரம் தெருவில் கிடக்கும் காகிதத்தை எடுத்து ,மனம் போன போக்கில் ஏதோ வாசிப்பார். அப்படி அவர் வாசித்தது, அடுத்த நாள் நாளிதழ்களில் , தலைப்புச் செய்தியாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. அவர் காகிதங்களை வாசிப்பது ஒருவகை 'லிபி' (எழுத்து) தியானம் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டினால், அது உலக நிகழ்வாகவோ அல்லது அவரைத் தேடி வரும் பக்தரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவமாகவோ அப்படியே பலிக்கும். இதனால் அவர் 'பேப்பர் சுவாமிகள்' என்று மக்களால் அடையாளப்படுத்தப்பட்டார். 1941-ஆம் ஆண்டில் சுவாமிகள் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் காட்சியளித்ததாகச் சொல்லப்படுகிறது. இது அந்த காலத்து 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் செய்தியாகவும் வெளிவந்தது. இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 'சுப்பையா' என்ற சிறுவன் வாயில் கஞ்சி ஊற்றி அவனை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்ததாக ஒரு வரலாறு மக்களிடையே பிரபலம். கடும் வறட்சி நிலவிய காலத்தில் சுவாமிகளின் அருளால் அப்பகுதியில் மழை பெய்ய வைத்துள்ளார். தன் பக்தர்களின் எதிர்காலத்தை முன்னரே கணித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர். குறிப்பாக ஒரு மாணவனின் தேர்வு முடிவை, முந்தைய ஆண்டு பழைய பேப்பரைக் காட்டியே சரியாகக் கணித்துக் கூறியுள்ளார். ரசவாதம் போன்ற வித்தைகள் மூலம் சிலரது வறுமையை போக்கியுள்ளார். ஓரிரு இடங்களில் தான் மூதேவியின் ( ஜேஷ்டா தேவி )அருள் பெற்றவன் என சுவாமிகள் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்கள். இளையரசனேந்தல் ஜமீன் குடும்பத்துக்கு ஆண் வாரிசு பாக்கியம் கிட்டாத நிலையில், சுவாமிகள் சந்தித்து ஜமீன் வேண்ட... அந்த கனமே சுவாமிகள் ஆசீர்வதித்து, இன்ன நட்சதிரத்தில் இரு ஆண் குழந்தைகள் பிறக்கும் என ஆசீர்வதித்து ,அதன்படி பிறந்த ஆண் வாரிசுகளுக்கு “பெரிய பேப்பர்” மற்றும் “சின்ன பேப்பர்” எனப் பெயர்கள் வைக்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டு வாக்கில் இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் சுவாமிகளைத் தங்கள் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அவரது இறுதிக்காலம் வரை அங்கேயே தங்கியிருந்து அருளாசி வழங்கினார். சுவாமிகள் இளையரசனேந்தல் ஜமீன் அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியிலேயே 14-05-1956 ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்திலேயே தற்போது அழகிய அதிஷ்டானக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. சமாதி பீடத்தின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜை விழா ஜமீன் குடும்பத்தினர் மற்றும் பக்தர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. கோவில்பட்டியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. செய்தித்தாள் நேர்த்திக்கடன்: சுவாமிகளின் பெயரே பேப்பர் சுவாமிகள் என்பதால், பக்தர்கள் இன்றும் நாளிதழ்களைச் (Newspapers) சன்னதியில் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பேப்பர் சுவாமிகளின் சரிதம் ,அடியேன் முன்பே வீடியோவாக உரையாற்றியுள்ளேன். அதன் லிங்க் கமெண்டில் வழங்கியுள்ளோம். ஹரி ஓம் மஹா காளி !

No comments:

Post a Comment

feb 19