Monday, April 6, 2026

என் பிரிய இலங்கை ( வர்த்தக ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்) வானொலியே, நண்பா, நீ எங்கே போனாய்??? .

 என் பிரிய இலங்கை ( வர்த்தக ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்) வானொலியே,

நண்பா, நீ எங்கே போனாய்??? . வாழ்க்கையை இந்த நொடியிலிருந்து திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை என்னுடைய பொழுதுகளை ஆக்கிரமித்திருந்தது இசை என்றால் அதன் ஒரே காரணம் நீதான். ஒரு சின்ன பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரைம், டெலிபன்கன் ரேடியோவையும் அப்பாவிடம் அடம் பிடித்து அழுது வாங்கியதும், நீ என்னை தாலாட்டி வளர்த்ததும் மறக்க முடியவில்லைதான். தமிழ் என் மூச்சில் கலந்ததும் தமிழை நான் உயிராய் நேசிக்க ஆரம்பித்ததும் உன்னால் தானே. காலை ஆரம்பிக்கும் உன் பொங்கும் பூம்புனலில் என் கல்லூரி நாட்களின் விடியல்கள் வசந்தமாக மாறியிருக்கின்றன. நேயர் விருப்பம் ஒலிச்சித்திரம் நீங்கள் கேட்டவை வினாடி வினா அன்றும் இன்றும் திரைக்கதம்பம் புது வெள்ளம் குறுக்கெழுத்துப் போட்டி மலர்ந்தும் மலராதவை இசைத் தேர்தல் பாட்டுக்கு பாட்டு துப்பறியும் ரத்தினம் இசையும் கதையும் இன்றைய நேயர் விவசாய நேயர் விருப்பம் இரவின் மடியில் என உன்னில் திளைத்துத்தான் என் இளமை நாட்கள் நகர்ந்திருக்கின்றன. உன் அறிவிப்பாளர்களின் குரல்களில் தான் கம்பீரம் என்ற சொல்லுக்கே பொருள் அறிந்தேன். கே. எஸ் ராஜாவும் , அப்துல் ஹமீதும், ராஜேஸ்வரி சண்முகமும், மயில்வாகனன் சர்வானந்தாவும் பேசும் முத்தான கம்பீரத் தமிழை இத்தலைமுறையினர் இழந்துதான் போனார்கள். "பிறந்தநாள் இன்று பிறந்த நாள்" என்ற கணீர்குரலில் உன் அறிவிப்பாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை பூக்களாய் தெளிக்கையில் என் பிறந்த நாள் என்று வரும் என ஏங்கியதும் உண்டு. மதியமும் மாலையும் இணையும் வேளையில் வரும் கதைச்சித்திரத்தில் "அவன் மாத்தளையில் புறப்பட்டு கொக்குவில் சேர்ந்தடைந்தான்" என்று உன் வர்ணனையாளர் கதையை விவரிக்கையில்தான் உன் தேசத்து ஊர்ப்பெயர்கள் முதன் முதலாய் அறிமுகமாயின. இப்பொழுது நேரம் சரியாக காலை ஏழு மணி ஐம்பத்து ஒன்று என உன் அறிவிப்பாளர் துல்லியமாக உரைக்கையில் தான் நான் பக்கத்து நகரில் உள்ள என் கல்லூரிக்குச் செல்ல, என் கிராமத்து வழி வரும் ஒரே ஒரு நகரப் பேருந்தைப் பிடிக்க ஓடியிருக்கிறேன். உன் வர்த்தக ஒலிபரப்பின் தமிழ்ச் சேவை இரண்டிற்கு, கல்லூரி நாட்களில் கவிதை அனுப்பிவிட்டு, வர்ணனையாளர் என் பெயரையும் முகவரியையும் சொல்லி வாசிக்கையில் என் அப்பாவின் கண்களில் துளிர்க்கும் நீரில்தான் என் கவிதைகளுக்கான தேடல் துவங்கியது.. என் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் மீராவிடம் ஓடிப்போய் என் கவிதை ஒலிபரப்பான செய்தி சொல்கையில் குறுநகையுடன் அவர் நானும் கேட்டேன் என வாழ்த்துகையில் சிகரத்தை தொட்டிருக்கிறேன். இப்படி அந்த நந்நாட்களில் எல்லாமுமாய் இருந்த நீ இன்று எங்கு தொலைந்தாய்?? அன்று எனக்குள் தமிழ் விதை தூவிய நீ இப்போது பூத்துக் குலுங்கும் விருட்சத்தைக் காண மீண்டு(ம்) வா நண்பா... இன்று உலக ரேடியோ தினம்...



No comments:

Post a Comment

feb 19