Saturday, December 23, 2017

*ஜெருசலேம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை நிராகரிக்கும் ஐ.நா. தீர்மானம் வெற்றி*

*ஜெருசலேம் தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை நிராகரிக்கும் ஐ.நா. தீர்மானம் வெற்றி*
--------------------------------------
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் அபார வெற்றி பெற்றுள்ளது.

128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பாலத்தீனமும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.
"புனித ஜெருசலேம் நகரத்தின் பண்பையும், நிலையையும், மக்கள் வகைப்பாட்டையும் மாற்றுகிற எந்த முடிவுக்கும் நடவடிக்கைக்கும் சட்ட மதிப்பு இல்லை, அது செல்லத்தக்கதும் இல்லை," என்று ஒரு தீர்மானம் குறிப்பிடுகிறது.
இது தொடர்பான முந்தைய பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஏற்ப அத்தகைய முடிவுகள் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும், 1980ல் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றின்படி உறுப்பு நாடுகள் தங்கள் தூதரகங்களை புனித நகரான ஜெருசலேத்தில் அமைக்கக்கூடாது என்றும் தற்போது பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானம் குறிப்பிடுகிறது.
இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்த பிறகும் இப்போது இத்தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
மிரட்டலையும், அச்சுறுத்திப் பணியவைக்கும் முயற்சியையும் நிராகரிக்கவேண்டும் என்று வாக்கெடுப்புக்கு முன்னதாக பாலத்தீன வெளியுறவு அமைச்சர் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்பார்க்கப்படும் முடிவினை முற்றாக நிராகரிக்கப்போவதாக வாக்கெடுப்புக்கு முன்னதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஐ.நா.வை 'பொய்களின் அவை' என்று குறிப்பிட்டார்.



K S Radhakrishnan
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்.*
22-12-2017

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...