Friday, August 31, 2018

சில நேரங்களில் ஏற்படும் ரௌத்திரங்கள்......

சில நேரங்களில் ஏற்படும் ரௌத்திரங்கள்......
---------------------
It will never matter what others think of you,
It will always matter what you think of welfare state.

It will never matter what position you reached,
It will always matter what you served to nation.
---------
கடந்த வாரம் சேலம், இராசிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடந்த திருமணங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இராசிபுரம் திருமணத்தில் தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும் என்மீது பாசம் கொண்ட எனது நெருங்கிய நண்பரான துக்ளக் ரமேஷ், இந்த தடவை தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட்டு வாங்கிவிடுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், சமீப காலங்களில் மருத்துவக் கல்லூரியில் சேர கேப்பிடேசன் பீஸ் கட்டி சீட் வாங்குவது போல் சொல்கிறீர்கள். அதில் எனக்கு ஆர்வமுமில்லை, அக்கறையுமில்லை என்று பதிலுரைத்தேன்.

அதற்கடுத்த நாள் கல்கிப் பிரியன் என்னிடம், மனிதன் புத்திசாலியா, முட்டாளா என்பது முக்கியமல்ல. அவன் பதவியில் இருக்கிறானா என்பது தான் முக்கியம் என்றதும், சற்று ஆத்திரத்துடன், என்ன பிரியன் பேசறீங்க என்றேன். அவர் என் மீது பாசத்துடன் தான் எப்போதும் இருப்பார். அவர் பொதுவாக சொல்லும் போது அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது.
புதுச்சேரி திருமணத்தில் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை பார்த்தபோது, நீங்கள் எம்.பியாக இருந்தீர்களா? எம்.எல்.ஏவாக இருந்தீர்களா? என்று கேட்டார். இல்லை என்றேன். திரும்பவும், ஒரு பதவியிலும் நீங்கள் இல்லையா? என்றார். இல்லை என்றேன். 1980, 90களில் போட்டியிட்ட தேர்தல்களில் சொற்ப ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். 1989 தேர்தலிலும் எனக்கு எதிரான சில சக்திகள், அமைச்சராகி விடுவானோ என்று தோற்கடிக்கவும் சில வேலைகளை செய்தனர். 1998இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட்டு பின்னர் அது தடுக்கப்பட்டது.

இப்படியான நிலையில் நீங்கள் சொன்ன பதவிகளுக்கு என்னால் வரமுடியவில்லை. அதுதான் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தகுதி என்றால் அது வெற்றுப் பாசாங்குத்தனமாகும். இன்றும் அரசியலில் பல முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

எனது வட்டாரத்தில் எஸ்.என்.இராஜேந்திரன், ஒய்.எஸ்.எம்.யூசுப், நேற்று மறைந்த கடையநல்லூர் நாகூர் மீரான் போன்ற சில அமைச்சர்கள் இருந்தனர். அவர்களை பற்றி இன்றைக்கு யாருக்கும் நினைவில் இல்லை. பதவிகள் வரும், பதவிகள் போகும் என்று சற்று காட்டமுடன் சொன்னேன். பதவிகள் நிரந்தரமல்ல. கடமைகள் தான் ஒருவனை நித்யனாக்குகின்றது. என்னை யாராவது சந்திக்கும்போது, உங்களுக்கான பதவிகள் வரவில்லையே என்று அரசியலில் மூத்த தலைவர்களாக இருந்த சங்கரைய்யா, நல்லகண்ணு, நெடுமாறன், மறைந்த இரா. செழியன் போன்றவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எனப் பல முக்கிய நண்பர்கள் அக்கறையோடு கேட்பதே பெருமையாக கருதுகிறேன். பதவியில் இருப்போருக்கும், இருந்தவர்களுக்கும் இந்த மாதிரி அக்கறையான, விசாரிப்புகள் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இந்தளவு மரியாதை இருக்கும் போது, அதைவிடவா பதவிகள் முக்கியம்.
கடந்த 1972லிருந்து பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என அனைவரோடும் அறிமுகமும் பழக்கமும் இருந்தது. பெருந்தலைவர் என்னை கோவில்பட்டி தம்பி என்று அன்புடன் அழைப்பார், கலைஞர் ராதா என்று வாஞ்சையோடு அழைப்பார், எம்.ஜி.ஆர்., வக்கீல் சார் என்று உரிமையோடு அழைப்பார், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ராதாண்ணே என்று அழைப்பார். எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும் என்றேன்.

இந்த அரசியலில் 49 வருட காலத்தில் விவசாயிகள், விவசாயிகளுடைய ஜப்தி, கடன் நிவாரணம், கங்கை - காவிரியை குமரி மாவட்ட நெய்யாறோடு இணைப்பு, நதிகளை தேசிய மயமாக்கப்பட வேண்டும், நீர் நிலைகள் பாதுகாப்பு, நதிநீர் பிரச்சனைகள். சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கூடங்குளம், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை பிரச்சனைகள் குறித்தும், மனித உரிமைகள் குறித்தும். தேர்தல் மூலமாக ஊழல் ஒழிப்பு, போக்குவரத்து நெரிசல், கண்ணகி கோட்டம் பிரச்சனை, தமிழகத்தில் மேலவை அமைய வேண்டுமென முக்கியமாக தமிழக பொதுநலம் குறித்த பல வழக்குகளை இந்த எளியவனால் தொடுக்க மட்டுமே முடிந்தது. இதுவரை தமிழக பிரச்சனைகள் குறித்து 15 முக்கியமான நூல்களை எழுதியுள்ளேன். என்னுடைய கட்டுரைகள் அனைத்து நாளிதழ்களிலும் 40 ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஐ. நா., மன்றத்தில் 1993ல் கௌரவமான வேலை கிடைத்தது. எனக்கு கீழ் வழக்கறிஞர் தொழிலில் ஜுனியர்களாக இருந்தவர்கள், என்னுடைய தேர்தல் பணிகள் ஆற்றியவர்கள் எல்லாம் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கின்றார்கள். என்னுடைய உதவியாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களாகவும் ஆகிவிட்டனர்.

இதையும் கடந்து மனத் தெம்போடு என்னால் இயன்ற பணிகளை செய்தும், கவனித்தும் வருகின்றேன். பதவியில் இதுவரை வகித்தவர்கள் எல்லாம் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் தெரியும். அவர்களை விட எந்தவிதத்திலும் என்னுடைய தகுதி குறையவும் இல்லை, பதவியால் தான் ஒருவர் பொது வாழ்வில் அங்கீகரிக்கப்படுவார் எனில் அப்படிப்பட்ட அங்கீகாரத்தை நான் பொருட்படுத்துவதும் இல்லை.

நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எத்தனை பேர் அவைகளில் போர்குணத்தோடு தமிழக பிரச்சனைகளை பேசியுள்ளார்கள் என்று சொல்லமுடியுமா? பொம்மைகள் போல டெல்லிக்கு செல்கிறார்கள், பதவி பவுசுகளை அனுபவித்து வருகிறார்கள். நாட்டின் முக்கிய பிரச்சனைகளை குறித்து புரிதலும் கிடையாது, அதைகுறித்து பேசுவதும் கிடையாது. நாடாளுமன்ற இடங்களை உட்கார்ந்து இடத்தை தேய்த்துவிட்டு எழுந்துவிட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நபர்களைத் தான் தகுதியே தடை என்ற நிலையில் மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

அவர்களை விட நான் ஆற்றிய பணிகளும், கடமைகளும் மகத்தானது என கம்பீரத்தோடும், மிடுக்கோடும் இவ்வாறு கேட்ட நண்பரிடம் பதில் கூறினேன். தற்போதைய சந்தை ஜனநாயகத்திலும், வியாபார அரசியலிலும் யார் வேண்டுமானலும் எம்.பி., ஆகலாம். ஆனால், அவர்களிடம் தமிழக பிரச்சனைகளை குறித்து கேட்டால் சொல்லத் தெரியாமல் தடுமாறுவார்கள். இப்படியான ஞானசூனியங்கள் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அப்படிப்பட்ட பொறுப்புக்கு வரவேண்டிய அவசியமும், விருப்பமும் நிச்சயமாக எனக்கு கிடையாது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-08-2018

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...