Sunday, July 30, 2017

கந்தக பூமியில் கோபால்சாமிமலை


வானம் பார்த்த கரிசல் மண்ணில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை நெடுஞ்சாலையில் டி. கல்லுப்பட்டிக்கு முன்பாக வித்தியாசமான, கண்ணை ஈர்க்கக் கூடிய மலை அமைப்பும் அதன்மேல் கோபால்சாமி திருக்கோவிலும் அமைந்துள்ளது. இதை மோதக கோவில்என்றழைக்கப்படுவதும் உண்டு. இந்த உயர்ந்த குன்றில் ஏறிப் பார்த்தால் நீண்ட தொலைவுள்ள கிராமங்கள் எல்லாம் கண்ணில் படும். வைணவர்கள் வணங்கும் கருடாழ்வார் தோற்றமாக இருக்கின்றது என்று சொல்வதுண்டு.

இந்த கோவில் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் அங்கு அமைந்துள்ள ஜன்னலின் சாளரங்களை வைத்து இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தை நிர்ணயிக்கலாம். மூலஸ்தானத்தை சுற்றி மகாவிஷ்ணுவின் தசாவதாரம் ஓவியங்கள் உண்டு. மூலஸ்தானத்தில் இருந்து குடைவரை வாசல் வரை சங்கரய்யர் என்பவர் மலையை குடைந்து உருவாக்கி உள்ளார். இதற்கும் மேலே ஒருவர் மட்டும் செல்லும் அளவில், வட்டவடிவமாக துவாரம் அமைத்து கட்டியுள்ளனர். அதன் மேல், கல்தூண் ஒன்று விளக்கேற்ற அமைக்கப்பட்டுள்ளது. இங்கே பரத்வாஜ ரிஷி என்பவர் தங்கி தபசு செய்துள்ளார். பெரியாழ்வாரின் அபிமான ஸ்தலமாகவும் இம்மலைக்கோயில் உள்ளது. இங்குள்ள மண்டபங்களில் கோவர்த்தனகிரி என்ற மண்டபத்தை சங்கரய்யரும், பொதுமக்களும் யாசகம் எடுத்துக் கட்டியுள்ளனர்.

மலையில் கிணறு உள்ளது. வெங்கட்ராம நாயக்கர் என்பவர் இக்கோயிலுக்காக பல கிணறுகள் வெட்டியும் தண்ணீரே இல்லாமல் இருந்தது. தற்போதுள்ள கிணற்றை தோண்டும் போது, இதிலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது என வெங்கட்ராம நாயக்கரும், அவரது மனைவியையும் கிணற்றுக்குள் இருந்தனர். அன்றிரவு வேண்டியபடி தண்ணீர் வந்ததாக ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இதை சொர்ணகிரி என்றும் அழைக்கப்படும்.
இத்திருக்கோவிலினை சுற்றுலா மையமாக அரசு அமைத்தால் விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வந்து செல்வார்கள்.

#ஸ்ரீவில்லிபுத்தூர்
#கோபால்சாமி_மலை
#srivilliputtur
#gopalsamy_temple_hills
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

30-07-2017

1 comment:

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...