Sunday, October 8, 2023

•••• #இன்றைய பிம்பஅரசியல்! #துறை இல்லா அமைச்சர்!! #செந்தில்பாலாஜி விவகாரம் . Minster without portfolio

ஒரு நாளிதழுக்கு அனுப்பட்ட  எனது கட்டுரை

•••• 
#இன்றைய பிம்பஅரசியல்!     
  #துறை இல்லா அமைச்சர்!!
 #செந்தில்பாலாஜி விவகாரம் . 
Minster without portfolio 



——————————————————-

‘’The primary duty of government is to maintain the absolute sovereignty of the law, always, everywhere and against any institution, however powerful.
Also,
Let us never forget this fundamental truth: The state has no source of money other than the money people earn themselves.’’




‘’கொச்சைப் பிழைப்பறி யோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறி யோம் 
எத்தும் போலி பகட்டு 
புரட்டறி யோம்…… ‘’

நீதிமன்றம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல! -
அதிகாரித்தில் உள்ளவர்கள் மீதான வழக்குகள் நீர்த்துப்போவது அதிர்ச்சியளிக்கிறது! -சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

நீதி நியாயம் கெட்டுப்போன சமூகத்தின் ஓர் அறிகுறி செந்தில்பாலாஜி
சென்னைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சில  மாதங்களுக்கு  முன் வருகை      தந்த சில நாட்களிலேயே மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசுவேலை வாக்குறுதியில் செய்யப்பட்ட  பண மோசடி பற்றிய வழக்கு இப்போது பாலாஜி மீது பாய்ந்திருக்கிறது. உடனே பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது. தற்போது இதயநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு காவேரி மருத்துவமனையில் அவர் இருந்தார். அவர் உடல் நிலையில் நலமாக  புழல் சிறையில்  இருக்கட்டும்.
செந்தில்பாலாஜியை சென்னைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் அனுமதித்தது தவறு என என் போன்றவர்களுன் கருத்து. அதுதான் சட்டத்தின் முறை. அதுவே சரி என இறுதி  தீர்ப்பிலும் வந்தது.

இதற்கிடையில், இந்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடுத்த வழக்கின்  மீதான விசாரணையை ஜூன் 21, 2023 அன்று ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் முதலில் விசாரிக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

தி.மு.க.வின் இரட்டை வேடம், இரட்டை நிலைப்பாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 14 அன்று நடந்த பாலாஜி கைதிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பிஎம்எல்ஏ மற்றும் யுஏபிஏ ஆகிய சட்டங்களின் கீழ் பாலாஜி மீது தொடுக்கப்பட்ட பணமோசடி வழக்கு  அரசியல் உள்நோக்கம் கொண்ட பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறொன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார்.  வருமான வரித்துறை, சிபிஐ அமலாக்கத் துறை ஆகியவற்றை  அனுப்பி  அரசியல் எதிரிகளைப்  பயமுறுத்தும் பாஜகவின் தந்திரம் இது என்று அவர் கூறுகிறார்.  

எதிரிகளை விடமாட்டேன் என்று ஸ்டாலினின் தந்தையும் திமுக தலைவருமான கலைஞர் ஒரு முறை திட்டவட்டமாகக் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.  அதேபோல்,  இந்த அரசியல் ரீதியான தாக்குதல்களை திமுகவால் எதிர்கொள்ள முடியும் என்றும், கடந்த காலங்களில் கட்சி அனைத்து நெருக்கடிகளையும் எவ்வாறு எதிர்கொண்டதுஎன்பதையும்,சோதனைகளிலிருந்து அது எவ்வாறு மீண்டது என்பதையும் ஸ்டாலின் ஒரு காணாலியில் நினைவு கூர்ந்தார்.  இதில் வேடிக்கை என்னவென்றால், எட்டு ஆண்டுகளுக்கு இதே பாலாஜியை  ஸ்டாலினும், திமுகவினரும் எதிர்த்தார்கள்.

கடந்த2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி பலரிடம் மொத்தம் ரூ.4.25 கோடி லஞ்சம் பெற்றதாக பாலாஜி மீதான முக்கிய குற்றச்சாட்டு இருந்தது. அதனால்தான்  கடந்த 2015-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
2016-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் தனது முகநூல் பதிவில், செந்தில்பாலாஜி தனது உதவியாளர் மூலம் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபரிடம் ரூ.4.25 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.
இப்போது அவரது மகன் ஸ்டாலின் தனது தந்தை முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டிய நபரை ஆதரிக்கிறார்.ஸ்டாலின்
மற்றும் கனிமொழியும் இந்த குற்றசாட்டை கடுமையாக செந்தில்  பாலாஜி மீது சாடி பொது வெளி வைத்தனர். என்ன ஒரு குழப்பமான முரண்பாடு! என்ன ஒரு இரட்டைப் பேச்சு! நேரத்துக்கு ஓர் நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு..ஒன்று உண்மை அன்று இதே செந்தில் பாலாஜியை அதிமுக அமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் சொன்னார்.  இன்று திமுக ஆட்சியில்  முதல்வர் ஸ்டாலின் விருப்பம் போல அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது.  முதல்வர் ஸ்டாலினின்ன்
முன விருப்பம் நடந்துள்ளது. இதற்கு பதட்டம் ஏன்?

மனுதாரருக்கும் பிரதிவாதிக்கும் இடையே நீதிமன்றத்திற்கு கடன் கொடுக்கல் வாங்கல் வழக்குமாதிரி (money suit)
வெளியே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலாஜி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது.  ஆனால் 2023 மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. லஞ்சம் கொடுப்பவரும் லஞ்சம் வாங்குபவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு சமாதானம் செய்திருக்க முடியும் என்று யோசித்தது. பொதுவாழ்வில் நீதியும் நியாயமும் சமரசம் செய்யப்படவில்லையா?  மேலும், அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடரவும், இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே செந்தில் பாலாஜி    வழக்கில் ரெய்டு, 18 மணி நேர விசாரணை, கைது என அமலாக்கத் துறை தீவிரம் காட்டியது. பின் அமலாக்கத் துறை நீதிமன்ற அனுமதியை  பெற்று விசாரித்தது.மறுபடியும் செந்தில் பாலாஜியை புழல் சிறையில் அடைக்கபட்டார். அங்கு சிறைவாசியாக இல்லாமல் சகல வசதிகள்ளோடு தமிழக ஆட்சியாளர் ஆதரவோடு இருக்கிறார் என பலர் சொல்கின்றனர்.

இந்திய வரலாற்றில் தன்மீது குற்றசாட்டு
இல்லை எனிலும் தார்மீக கடமை என கண்ணியமாக அமைச்சர் பதவிலிருந்து விலகியதும் உண்டு. ஆனால் செந்தில் பாலாஜி விஷயத்தில் ஏன் இல்லை பலரின் கேள்வி. அவரை காப்பாற்ற ஏதோ வகையில் துடிப்பது ஏன்? சென்னை உயர் நீதி மன்றம் எப்படி செந்தில் பாலாஜி  அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என வினாவை எழுப்பியும் இவரை நீக்க மறுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  செந்தில் பாலாஜி  கைது ஆகி கிட்டதட்ட நானகு மாதங்கள் ஆகி விட்டன. இவர் புழல் சிறையில் கைதியாக இருந்து கொண்டு அமைச்சராக இருப்பதே
குற்றம், பிழை, தவறு என்பதை இந்த திமுக ஆட்சி  மறுக்கிறது ஏன்? இது ஜனநாயக மாண்பை சீர்குழைக்கும். கலைஞர் இன்று இருந்தால்   செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்திருப்பார். ஸ்டாலினுக்கு இது தவறு என தெரியவில்லையா? இதில் பிடிவாதம் எதற்கு? கலைஞர் 2ஜி விவகாரத்தில் ஆ. ராசவை உடனே பதவி விலக சொன்னார்.
அப்படி என்றால் செந்தில் பாலாஜியை ஒரு நியாயம்….? ஆ. ராசாவுக்கு ஒரு நியாயம்….? 
செந்தில் பாலாஜி விட கொள்கைரீதியாக எதிர்கட்சியாக திமுகவுக்கு எங்களை போன்ற உழைத்தவர்கள் பலர் உண்டு. நான்குஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணந்து கலைஞர் சரியாக பார்க்காத செந்தில் பாலாஜிக்கு இப்படியான மரியாதை. என்ன சொல்ல….?

1)ராஜாஜி முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார் 

2)கடந்த1956- நவம்பர் 23-ந் தேதி. சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெருமழைக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து கொண்டிருந்தது. அரியலூர்- கல்லாகம் இடையேயான மருதையாற்று பாலத்தை ரயில் கொட்டும் பேய்மழைக்கு நடுவே கும்மிருட்டில் இரைச்சலெடுத்து ஓடும் காட்டாற்றை விஞ்சும் மரண ஓலங்களே எங்கும்.. மருதையாற்று பாலம் பலமிழந்து ஆற்றுக்குள் மூழ்க தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் அத்தனை பயணிகளுடன் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி இந்து துயரத்தை தனது கடமை தவறியது பதவி தானே முன வந்து பதவி விலகினார்.

3)பிரதாப் சிங் கைரோன் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது (அப்போது பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது ) 1964 ஆம் ஆண்டில், ஊழல் (தாஸ் கமிஷன்)விசாரணைக் கமிஷனின் அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருந்து கைரோன் ராஜினாமா செய்தார். 

4) கடந்த 1965ஆம் ஆண்டு மத்திய உணவு அமைச்சராக இருந்து சி.சுப்பிரமணியம், மத்திய ராஜாங்க(மாநில) அமைச்சர் (பெட்ரோலியம் மற்றும் இரசாயனங்கள்) இருந்த ஓ.வி.அழகேசன் அப்போது சென்னை மாநிலத்தில் (தமிழகம்) மாணவர்களின் இந்தி போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் அமைச்சர் பதவிகளை 11 பிப்ரவரி 1965 அன்று துறந்தார்கள்.

5) கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே கர்நாடக உயர்நீதிமன்றம் இவர் அரசின் மீது சாராய பாட்டில் வழக்கில் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவர் தன் முதலமைச்சர் பதவியில் இருந்து 13 பிப்ரவரி 1986 அன்று விலகினார். ஆனால் மூன்று நாள் கழித்து 16 பிப்ரவரி அன்று பதவி விலகலைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதால் இவர் தன் பதவியை விட்டு விலகினார். 

6) வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சராகப்
 இருந்த சேடபட்டி முத்தையா, மிக குறுகிய காலமே அப்பதவியில் இருந்த அவர், சென்னை நீதிமன்றத்தில் நடந்த ஊழல் வழக்கு காரணமாக 1998 பதவி விலக நேரிட்டது.

முன்பு; 
•கிருஷ்ணமேன்ன் (ஜீப்ஊழல்), மேனன் நெறிமுறையைத் தவிர்த்து ரூ. ஜீப்களை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனத்திற்கு 80 லட்சம் ரூபாய். ஜீப் ஊழல் வழக்கை நீதி விசாரணைக்காக முடித்துவிட்டதாக உள்துறை அமைச்சரும் இந்திய அரசாங்கமும் 30 செப்டம்பர் 1955 அன்று அறிவித்த கோவிந்த் பல்லப் பந்த், அனந்தசயனம் அய்யங்கார் தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையை புறக்கணித்தார் .  அவர் அறிவித்தார், "அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்த விஷயத்தை முடித்து வைப்பதற்கு அது முடிவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் திருப்தியடையவில்லை என்றால் அவர்கள் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கலாம்". விரைவில், 3 பிப்ரவரி 1956 அன்று, மேனன் நேரு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக சேர்க்கப்பட்டார்.  பின்னர், மேனன் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பாதுகாப்பு அமைச்சரானார். இருப்பினும், திரு மேனனின் தனிப்பட்ட நேர்மையை சந்தேகிக்க எந்த ஆதாரமும் இல்லை.

•டிடிகே, (எல்ஐசி ஊழல்), பிப்ரவரி 18, 1958 அன்று, மத்திய அரசின் அப்போதைய நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி (TTK) தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிதாஸ் முந்த்ராவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 1.26 கோடி ரூபாய் முதலீடு செய்த எல்ஐசி-முந்த்ரா ஊழல் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.

 •கலிங்கா டியூப்ஸு ஊழல் 1965 ஆம் ஆண்டில், ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக் (முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை) அரசாங்க ஒப்பந்தத்தை வழங்குவதில் தனது தனியாருக்குச் சொந்தமான நிறுவனமான கலிங்கா டியூப்ஸுக்கு ஆதரவாக இருந்தார் என்பது தெரிந்த பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

•பின்பு,வாழப்பாடி1998இல் ராம்மூர்த்தி( காவேரி நதி நீர் சிக்கல்)
  

  இப்படி பல நிகழ்வுகள் உண்டு. திமுக அமைச்சர் பூங்கோதை வரை….

ஆனால், செந்தில் பாலாஜி புழல் சிறையில் ஊழல் வழக்கில் சிறை கைதி. இன்னும் துறை இல்லா அமைச்சர்.தான் ஊழல் குற்றம் செய்யவில்லை என வழக்கில் நிருபித்து பின்
அமைச்சராக வரட்டும். இதில் என்ன உச்ச நீதி மன்றம் சொல்லட்டும். தார்மீகப் பொறுப்பை, கண்ணியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான முன் உதாரணம் ஆகி விட கூடாது..

இலாகா இல்லாத அமைச்சர்
 இதனிடையே, ஊழல் கறை படிந்த அமைச்சரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் விரும்பினாலும், பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஸ்டாலின் வைத்திருக்கிறார். 
இந்தியாவில் இலாகா இல்லாத அமைச்சர்கள் இருந்தனர். ராஜாஜி உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு 1950 ஆம் ஆண்டில் நேரு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.  1956 ஆம் ஆண்டில் வி.கே.கிருஷ்ண மேனன் பாதுகாப்பு அமைச்சராவதற்கு முன்பு இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். லால் பகதூர் சாஸ்திரி அரியலூர் ரயில் விபத்து காரணமாக பதவி விலகினார். பிரதமர் அதை ஏற்க்காமல் துறை இல்லா அமைச்சராக தொடர்ந்தார்.
நட்வர்சிங்,     முரசொலி மாறன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.
இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். 
தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 2004-2006 காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். இப்படி சிலர்.
விஷயம் என்னவென்றால், இந்த அமைச்சர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக இலாகா இல்லாமல் இருந்தனர். 

சில மாநில அமைச்சர்களும் இப்படி இலாகா அற்ற அமைச்சர்களாக இருந்தனர்.

ஆனால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததால் அவர் இப்போது இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். 
ஆனால் அரசியல் சாசனம் 226-வது பிரிவின் கீழ்  யாராவது ’க்வோ வாரண்டோ ரிட்’ தொடர்ந்தால், பாலாஜி தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிடும், ஏனெனில் ஒரு பொது  பதவியில் இருப்பவரை அவர் எந்த அதிகாரத்தின் கீழ் பதவி வகிக்கிறார் என்பதைச் சொல்லுமாறு  நீதிமன்றம் ஆணையிடலாம்.
இப்போதெல்லாம் உயர்மட்டத் தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது, மக்கள் ஆச்சரியபடுவதில்லை. இது  எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். 
மதிப்பீடுகளின் யுகம் போய்விட்டது
1960-க்குப் பின்பு பிறந்தவர்கள் அறம் சார்ந்த மதிப்பீடுகள் அழிந்து போன ஒரு தலைமுறையை உருவாக்கினார்கள் என்பதற்கு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.   
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கக்கன்
போன்ற தலைவர்களைக் கண்ட உயர்ந்த தார்மீக விழுமியங்களைக் கொண்ட  காலம் தற்போது வழக்கொழிந்ததாகவும், அதன் தலைவர்கள் காலாவதியானதாகவும் கருதப் படுகிறது.  

மானங்கெட்ட கூட்டணி தர்மம் என்னும் பெயரில் ஊழலை இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து ஆதரிக்க வேண்டாம் கூட்டணி கட்சிகள். செந்தில் வானத்தில் இருந்து குதித்து வந்த தேவதூதன் 

ஊரையே அடுத்து உலையில் போட்டவன் உத்தமராக தெரிகிறார்.இப்படியான இன்றைய நிலை.….
நியாயங்கள் நிராயுதபாணி · நீ வாலியைக் கொல்லவில்லை. அரச நீதியின் வேலியைக் கொன்று விட்டாய். என கம்பன் வரிகள் நினைவில் வருகிறது.

மதிமுகவில்நான் பார்த்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் கரூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் மாறி மாறி ஐந்துமுறை எம்எல்ஏ-வாக இருந்த பாலாஜி கொங்கு’ மண்டலத்தில் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார்.  அதனால்தான் பாலாஜி அதிமுகவிலிருந்து வெளிவந்த பின்பு அவரை  திமுக சேர்த்துக் கொள்ளத் தயங்கவில்லை. 
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததில் பாலாஜி முக்கிய பங்கு வகித்தார். 
அம்மா ஜெயலலிதாவின் அடிமை   என்று அவரே  பல   முறை தன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார்.  அப்போது முதல் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு போன்ற முக்கிய இலாகாக்களைக் கொண்ட  அமைச்சராக இருந்த வரை, பாலாஜியின் 23 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை உண்மையில் ஆச்சரியமளிக்கிறது.  

சென்னை உயர் நீதி மன்றம். செந்தில் பாலாஜியின் போக்கு வரத்து துறையில் வேலை வழங்கல் ஊழல் வழக்கு எப்படி முடித்தது,இவரின் ஆட்கொணர்வு மனு -ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) ஏற்பும் அதன் மீது அமலாக்கப் பிரிவின் உச்சநீதி மன்றத்தில் அளித்த தீர்ப்பும் சரியாக புரிதல் என் போன்ற வழக்கறிஞர் பலருக்கும் ஏற்பட வில்லை. நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது என நீதிபதி நிஷாபானுவும், தங்கள் காவலில் வைத்து விசாரிக்க கோரி அமலாக்க துறை அமர்வு நீதிமன்றத்தை அணுகியது குறித்து நீதிபதி பரத சக்கரவர்த்தியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆரம்பம் முதல் அமலாக்கத் துறை அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளது என்ற, நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு. இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.மூன்றாம் நீதிபதி; நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்புதான் சரி என்றும் மட்டுமல்ல ஊழல் செய்தவர்களுக்கு எதிரான குரலாக இருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என சிலர் அமைச்சர்கள் விடுதலையை  , எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். நல்ல தீர்க்கமான சட்டத்தின் ஆட்சி (Rule of law)  Due process of law முடிவு. 
சால்யூட் டு உயர்தி நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

புரையோடிப் போன ஓர் அரசியல் சமூகத்தின் உள்ளே செல்லரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய நோயின் சிறிய அறிகுறிதான் செந்தில் பாலாஜி. 
அரசியலில் தவறுகளைச் செய்வது தவறல்ல. தவறுகள் அம்பலமாகும் அளவுக்கு விடுவதுதான் தவறு. இதுதானே கடந்த அரை நூற்றாண்டாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அருமையான மாக்கியவெல்லியன் சித்தாந்தம்!

இன்றைய அரசியல் என்பது அலம்பல், அலட்டல், வெட்டி பந்தா,
பயன் அற்ற முறையற்ற  அலப்பறைகள்….

 ‘’சத்தியமேவ ஜெயதே 
வாய்மையே வெல்லும்’’ 
என்பது அர்த்த இல்லாமல் போய் விடக்கூடாது.

-- வழக்கறிஞர் கே. எஸ். இராதா கிருஷ்ணன், 
அரசியலார்

#இன்றைய_பிம்பஅரசியல்!      
#துறை_இல்லா_அமைச்சர்!!
#செந்தில்பாலாஜி_விவகாரம்
#திமுக #ஊழல் #தமிழகஅரசியல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-10-2023

No comments:

Post a Comment