Sunday, November 24, 2019

ஆளுநருக்கான_வரையறை_என்ன?’ ......................................................... #ஆளுநர்_மத்திய_அரசின் #கண்காணியா?Governor

‘#ஆளுநருக்கான_வரையறை_என்ன?’ 
.........................................................
#ஆளுநர்_மத்திய_அரசின் #கண்காணியா?
--------------------------

#இதுவரை_பிரிவு_356யை_72ஆண்டில் #132_முறை_பயன்_படுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர்களின் எல்லை அதிகாரம் என்ன? அதை மீறுகின்றனரா?

பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டவாறு, ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்ற வகையில் விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அரசியல் களத்தில் ஆறாவது விரல் போல ஆளுநர் பதவி நீட்டிக்கொண்டிருப்பது ஆங்கிலேய ஆட்சியின் சீதனமாகும். ஆங்கிலேயர்கள் மாநில அரசுகளை கண்காணிக்கும் கண்காணிகளாக ஆளுநர்களை நியமித்தனர். நாட்டின் விடுதலைக்கு பின் வைஸ்ராய் பதவி தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் பதவியாக மாற்றப்பட்டது. ஓய்வு காலங்களில் மத்தியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுநர்களை நியமித்தனர். அவர்களுக்கு இந்த பதவி கடைசி கால புகலிடமாகும்.  
தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை பதவியில் இருந்த ஆளுநர்கள் கண்ணியத்தோடு பொறுப்பிலிருந்ததையும் மறக்க முடியாது. பர்னாலா ஆளுநராக இருந்தபோது அன்றைய பிரதமர் சந்திரசேகர் ஜெயலலிதா தூண்டுதலால் திமுக ஆட்சியை 1991ல் கலைக்க முற்பட்ட போது தனது அறிக்கையை தர மறுத்துவிட்டு ஆட்சிக் கலைப்பு கூடாது என்ற நிலையில் இருந்தார். ஆனால் அவரையும் மீறி ‘ வேறு வழிகளிலும்’ (Otherwise) மாநில ஆட்சியை பிரிவு 356-ஐ கொண்டு கலைக்கலாம் என்ற நிலையில் கலைக்கப்பட்டது. 

இதுவரை பிரிவு 356யை 72ஆண்டில் 132முறைபயன்படுத்தப்பட்டுள்ளது.
பிகார் (சின்கா ஆட்சி) பஞ்சாப் (கெய்ரோன் ஆட்சி) பின்  எதிர்க்கட்சி கம்யூனிஸட்  ஆன்ட  கேரளாவில் இ.எம். எஸ்.   நம்பூதிரிபாட்தலைமையலான அரசு கலைக்கப்பட்டது.பிரிவு 356 தவறாக  பயன் படுத்துவதை குறித்து  உச்ச நீதி மன்றத்தில், எஸ்.ஆர். பொம்மை வழக்கின் பின் ஓரளவு தடுக்கப்பட்டது.

தமிழகத்தில்  சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபொழுது அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெலலிதாவிற்கும் பனிப்போர் நிகழ்ந்தது. பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரே இருக்கலாம் என்ற சட்ட முன்வடிவு வந்தபொழுது சென்னா ரெட்டி தனது அதிருப்தியை தெரிவித்தார். அதே காலகட்டத்தில் சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை குறித்தான அறிக்கையை மாநில அரசு என்று முதல்வர் ஜெயலலிதா மீது கண்டனம் தெரிவித்தார். மகாராஷ்டிரா பூகம்ப நிதிக்கு நன்கொடையாக சென்னாரெட்டியும், ஜெயலலிதாவும் தனித்தனியே திரட்டினார்கள். ஆளுநர் மாளிகை புதுப்பிக்க அனுப்பிய கோப்பினை ஜெயலலிதா கிடப்பில் போட்டுவிட்டார் என்று சென்னா ரெட்டி வேதனைப்பட்டதும் உண்டு. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் சென்னை வந்தபோது அவரை வரவேற்க ஆளுநரும், முதல்வரும் தனித்தனியே பந்தல்கள் அமைத்து வரவேற்ற நிகழ்ச்சி பத்திரிக்கைகள் நைய்யான்டியாகவும் எழுதியது. ஆளுநர் சென்னாரெட்டி ஒரு முறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அதை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இப்படியான ஆளுநர்களை குறித்தான விவகாரங்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

கடந்த காலங்களில் ஆந்திராவின் என்.டி.இராமாராவின் அமைச்சரவை நீக்கப்பட்டு அவரது அமைச்சரவையில் இருந்த பாஸ்கர ராவ் என்பவரை முதல்வராக்க இந்திரா காந்தி முயற்சியில் அன்றைய ஆந்திர ஆளுநர் செயல்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெரும்பான்மையுள்ள சட்டமன்றத்தை எப்படி கலைக்கமுடியும் என்று என்டிஆர் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு டெல்லி ஜன்பத்தில் பேரணி நடத்தி குடியரசுத் தலைவரிடம் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். 
அதே கால கட்டத்தில் காஷ்மீரத்திலும்
356 யை பயனபடித்தி பரூக் அமைச்சரவையை கலைத்து அவருடைய
மைத்துனர் ஷா தலைமையில் காங்கிரஸ்
பொம்மை அமைச்சரவையை நிறுவியது.

ஆளுநர்கள்,  முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்திலும், மாநில அரசுகள் கலைக்கும்போதும் தங்களுடைய பங்கு முக்கியமானது என்று கருதுகின்றனர். மேலும், ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அவர் மத்திய அரசின் கீழ்ப்பட்டவர் அல்லது மத்திய அரசின் கண்காணிப்பிற்கு உட்பட்டவர் என்ற வகையில் இல்லை. ஆனால், அவர் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட அரசியல் அமைப்பின் அங்கமாகவும், மாநில அரசின் அமைப்பில் தலைமையை ஏற்பவர் எனவும், ஹெக்டே முதல்வராக இருந்த போது, கர்நாடக அரசு 1980இல் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக் கூறுகிறது. மத்திய – மாநில உறவை ஆராயும் சர்க்காரியா குழு ஆளுநரைப் பற்றித் தனியாக குறிப்பிட்டுள்ளது. அதில் ஆளுநருடைய பொறுப்பு மிக முக்கியமானது என்றும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பாரபட்சமற்றவரே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும், அரசியலில் அண்மைக் காலம் வரை ஈடுபட்ட அரசியல்வாதியாக இருந்தவரை ஆளுநர் பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதுமட்டுமல்ல, சர்க்காரியா கமிஷனில் ஆளுநர் பற்றிய முக்கியமான பரிந்துரைகளை கீழ்வருமாறு தொகுக்கலாம். 

அதாவது, மத்திய அரசிலுள்ள ஆளும் கட்சியைச் சார்ந்தவர், மாற்று கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு நியமிக்கக் கூடாது. குடியரசுத் தலைவர் பிரதமர் ஆகியோர் குறிப்பிட்ட மாநிலங்களின் முதல்வரை அவசியம் ஆலோசித்த பின்பு ஆளுநரை நியமிக்க வேண்டும். இதனை முறைப்படுத்தும் வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 120வது பிரிவை திருத்த வேண்டும். ஆளுநர் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு உரியது என ஆக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து விருப்பப்படி விடுவிக்கக் கூடாது. ஒருவரை ஆளுநர் பதவியில் இருந்து விடுவிக்கும் முன்பு அவரின் விளக்கத்தைப் பெற்றபின் விலக்கப்பட வேண்டும். ஓர் ஆளுநரை பதவியில் இருந்து விலக்க நேர்ந்தாலோ, மாற்றப்பட்டாலோ அதற்கென காரணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆளுநர் அதைப்பற்றி விளக்கங்கள் அளித்திருந்தால் மக்களவை உறுப்பினர்கள் கவனத்திற்கு அதையும் கொண்டுவர வேண்டும். ஆளுநர் பதவி வகிக்கின்றவர் வருமானம் தரும் எந்த பதவியையும் ஏற்கக் கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும். கோப்புகள் பற்றி விளக்கம் பெற, மாநில அரசின் ஆலோசனை பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. கொள்கைத் திட்டங்களை மாநில அரசிடம் வலியுறுத்துவது ஆளுநரின் பணியல்ல. அதைப்போல பெரும்பான்மை ஆதரவு ஓர் அரசியல் கட்சிக்கு இருக்கிறது என்பதை சட்டமன்றத்தில் தான் சோதிக்க வேண்டுமேயொழிய ராஜ்பவனில் ஆளுநர் சோதனையில் ஈடுபடக் கூடாது.
இதுதான் ஆளுநரைப் பற்றி சர்க்காரியா வழங்கிய சுருக்கமான தொகுப்புரை ஆகும். ஆனால் நாட்டில் நடப்பில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?இவர்கள் நடு நிலை தவறி மத்திய அரசின் விருப்பத்தின் படிதான் தொடர்ந்து நடக்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட கர்நாடக மாநில வெள்ளை அறிக்கையோடு இல்லாமல், 1965 இல் மொரார்ஜி தேசாய் - ஹனுமந்தய்யா தலைமையில் அமைத்த ‘நிர்வாகக் சீர்திருத்தக்குழு அறிக்கை’, தமிழகத்தின் திமுக அரசு அமைத்த ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், இந்திரா காந்தி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு அறிக்கையும், மேற்கு வங்க ஜோதி பாசு அரசு அளித்த வெள்ளை அறிக்கையும், என்.டி. ராமாராவ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட ஐதராபாத் பிரகடனமும், ஸ்ரீ நகரில் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டில் ஸ்ரீ நகர் பிரகடனமும், கர்நாடகத்தில் அப்போதைய முதல்வர் ஹெக்டே எடுத்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும், அதன்பின் உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பும், வாஜ்பாய் காலத்தில் மத்திய அரசின் பூஞ்ச் கமிஷனின் பரிந்துரைகளும், மாநிலங்களிடையேயான கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகளும், ஆளுநரின் பணிகள், அதிகாரங்கள், வரம்புகள், சமன்பாடுகள், ஆட்சிக் கலைப்பு குறித்தான முடிவுகளை மேற்கொண்டாலும், மத்திய அரசின் கண்காணியாகவே ஆளுநர்கள் இதுவரை செயல்பட்டு வந்துள்ளனர். இவ்வளவு குழுக்களின் ஆய்வுகளின் அறிக்கைகள் இருந்தும் எதுவுமே ஈடேறாமல் இருக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் ஆளுநர் பொறுப்புக்கு சமமான பதவியை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பிரிட்டிஷ் காலனியில் கீழிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற காமன்வெல்த் நாடுகளில் தான் ஆளுநர் என்ற பொறுப்புகள் உள்ளன.  

தமிழக முன்னாள் ஆளுநர் குரானா திருமதி. ஜானகி இராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது எழுந்த சிக்கலில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டக் கோரினார். அரசியல்  சாசனம் பெரும்பான்மையைப் பற்றி விரிவாக குறிப்பிடப்படவில்லை. மக்களவைக்கு அல்லது மாநில சட்டமன்றத்திற்கு அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. இதுவரை சட்டமன்றத்தில் பெற்றுத்தான் ஆட்சியமைக்கும் மரபு நடைமுறையில் உள்ளது. ஆனால் 1960இல் திருவிதாங்கூரில் பட்டம் தாணுபிள்ளை அமைச்சரவை அமைத்தார். அவரது கட்சியில் 10 உறுப்பினர்களே இருந்தனர். பல மடங்கு மாற்றுக் கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு பட்டம் தாணுபிள்ளை தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு திருமதி இந்திரா காந்தி மத்தியில் சிறுபான்மை பலத்தை பெற்று இருந்தாலும், மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார். எனவே, இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுகிறபோது குடியரசுத் தலைவர், ஆளுநரின் முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகும். ஆளுநர் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமெயொழிய அதற்கு மீறிச் செயல்படுவது நல்லதல்ல.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பிரகாசா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்ததால், முதல் காங்கிரஸ் அமைச்சரவை உருவாகக் காரணமாக இருந்தார் என்பது சர்ச்சைக்குரிய செய்தியாகும்.

ஆளுநர் மத்திய அரசின் கீழுள்ள ஏஜெண்டாகவோ அல்லது இரப்பர் ஸ்டாம்பாகவோ செயல்படுகிறார். ஆளுநர் பதவி என்பது வெறும் அலங்காரத்திற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு மட்டும் என்று இல்லாமல், மத்திய – மாநில அரசுகளுக்கு ஒரு பாலமாக இருந்து மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய பயன்களைப் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு ஆற்றினால், மக்கள் பிரச்சினைகள் தீர வாய்ப்புண்டு. அத்தோடு மத்திய – மாநில உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் கவனித்துக் கொள்வதிலும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி இல்லாதபோது அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலங்களில் சம்பந்தப்பட்ட அரசை அகற்ற, ஆளுநரின் பரிந்துரை முக்கியமானது ஆகும். இச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலை இன்று எழுந்துள்ளது.

 “Governor is to be formally Constitutional Head with strictly limited powers whose discharge shown all functions would be required to follow the advice of the Ministry” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆளுநர், கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியமான அங்கம் வகிக்கின்றவராகவும் ஒரு மாநிலத்தில் தீர்மானம் இல்லாத நேரத்தை அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற பொறுப்பை உடையவராகவும் இருக்கிறார் எனவும், வழக்கறிஞர் திரு. சோலி சோரப்ஜி கூறுகின்றார். ஆளுநர் குறிப்பிட்ட அதிகாரத்துடன் மாநில அமைச்சரவை பரிந்துரைக்கும் அரசின் நிர்வாகத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பையும் பெற்றுள்ளார்.

கடந்த காலங்களில் ஆளுநர்களை நியமிக்கும்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஆளுநரை நியமிக்கும்போது பல பிரச்சினைகள் எழுந்தன. இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ஆளுநராக நியமிக்க இருந்த ராமலாலுக்கு எதிரானக் கண்டனங்கள் எழுந்தன. இதை குறித்து ராஜமன்னார் குழு அறிக்கையில் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே ஆளுநரை நியமிக்கவேண்டுமென்று பரிந்துரைத்தது. 

ஆளுநரை நியமிக்கும்போது மத்திய அரசு பாரபட்சமாகவும் தங்களுடைய கட்சியில் உள்ள ஒரு சிலரை திருப்திப்படுத்தும் வகையில் ஆளுநருடைய முற்கால அரசியல் வரலாற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாமலும், அடிப்படையில் அவருடைய நேர்மையை ஆராயாமலும் நியமிக்கப்படுவது நல்லதல்ல.

ஆளுநரை நியமிக்கும்போது, சம்பந்தபட்ட மாநில முதல்வருடைய ஆலோசனை கேட்ட பிறகு நியமித்தால், ஆளுநரும் மாநில முதல்வர் தலைமையில் இயங்கும் ஆளுநரால் நியமிக்கப்படுபவர் தங்களுக்கென தனியாக அதிகாரம் இருக்கிறது என்ற தோரணையில் செயல்படவோ, வீணான ஜம்பத்திற்கு ராஜபவனத்தில் செலவுகள் செய்து மக்களுடைய வரிப்பணத்தைப் பாழ்படுத்துவதைத் தவிர்த்து எளிமையாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஜனதா ஆட்சி மத்தியில் இருந்தபோது பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் காந்தியவாதி. சென்னை ராஜ்பவனில் மது, புகை பிடிப்பதை அறவே தடுத்துவிட்டார். அந்தப் பிரச்சினையால் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பட்வாரி விலக்கப்பட்டார். மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்படுபவர், தாங்கள் விரும்பும் ஒருவரை தங்களின் ஏஜெண்ட் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுவதோ அல்லது விரும்பாதபோது பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதோ கூடாது. ஆளுநர், அரசியல் காரணத்தினால் மத்திய அரசால் அகற்ற நேர்ந்தால் அதற்கு தடையாக (Mutual checks and Balances) அரசியல் சட்டத்தைத் திருத்தப்பட வேண்டும். எனவே ஆளுநர், “”As a friend, Phliosapher, guide to the State Government and defender of the Constitution. The Office of the Governer assumes crucial role in a Federal set up. He will be called upon to exercise his discriminary powers in the event of the broke down of the constitutional machinery in the State (Soli J. Sorabjee)” ஆளுநர் ஒரு மாநில நிர்வாகத்தில் நண்பராகவும், அதை வழி நடத்திச் செல்லக்கூடிய வழி காட்டியாகவும் மாநில அரசுக்காக வாதிடுபவராகவும், அரசியல் அமைப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளார். இன்றைக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைவிட எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் பல உள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநருடைய அதிகாரங்கள் 154, 160, 161, 162 ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. 356 பிரிவில் இந்தியக் குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தும்போது, ஆளுநருடைய பங்கு மிக முக்கியமானது ஆகும். ஆனால் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்கு பின் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ தங்களது விருப்பத்திற்கேற்றவாறு பிரிவு 356ஐ பயன்படுத்துவதை தடுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு நிம்மதியை தந்த செய்தியாகும். இதுவரை இந்த 356வது பிரிவை கொண்டு உத்தரகண்ட் அரசோடு சேர்த்து 126 முறை மாநில அரசு கலைக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர்கள் ராஜ்பவனின் வாடகை தராத குடியிருப்புவாசிகள் என்று நீதிபதி கிருஷ்ணய்யர் குறிப்பிட்டதுண்டு. இந்த பகட்டான பதவியால் அரசு கஜானாவின் பணம் விரயமாகிறது என்று குறிப்பிட்டார். 

ஆளுநர் பதவி தேவையில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா 25-07-1980இல் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை கொண்டுவந்து, ‘மக்களின் வரிப்பணத்தில் தண்டத்தீனியாக இருக்கும் ஆளுநர் பதவி தேவையற்றது’ என்று கூறினார். 
அரசியலமைப்பு அவையில் கவர்னர் பதவியை பற்றிய விவாதம் வந்தபொழுது விடுதலைப் போரின் முக்கிய தளபதியாக விளங்கிய மஹாவீர் தியாகி, ‘மத்திய அரசின் ஏஜென்ட்டாக தான் ஆளுநர் இருப்பார்’ என்று பேசினார்.

கிருபளானி சென்னை ராஜ்பவனில் பட்வாரி ஆளுநராக இருக்கும்பொழுது விருந்தினராக வந்து தங்கினார். அடியேன், தற்போது தினமணி ஆசிரியரான வைத்தியநாதன் போன்றவர்களெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியாவின் காந்தியார் காலத்திலேயே மூத்த தலைவராக விளங்கியவர். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பட்வாரி, என்னை ஊருக்கு செல்ல விடமாட்டேன் என்கிறார். இந்த மாளிகை மாதிரியான ராஜ்பவனில் தங்க மனது ஒப்பவில்லை. வேலையில்லாத  மூத்த காங்கிரஸ்காரர்களுக்கு திருப்திப்படுத்த, வசதியோடு அவர்கள் வாழ நியமிக்கும் பதவிதான் கவர்னர். இதுவரை இப்படித்தான் நடந்துள்ளது.’ எனச் சொன்னதுண்டு. அவர் பாணியிலேயே, ‘கவர்னர் மத்திய அரசின் கண்காணி (கங்கானி) தானோ? ’
மகாராஷ்டிரத்தில் நடந்த கூத்துகள் என்ன?

எந்தவொரு தகுதி அடிப்படையில்லாமல் தேர்ந்தெடுக்கப்படாத அரசியல் சாசன பதவியாக விளங்கும் ஆளுநர் பதவி தேவைதானா? அல்லது அதை முறைப்படுத்த வேண்டுமா? என்று ஆய்வு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.  

*மீள்பதிவு #ஜம்மு_காஷ்மீர் #சட்டப்பேரவை_கலைப்பு #Art_356.* 
-----------------------

காஷ்மீரில் நடைபெற்று வந்த மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றமும் முடக்கப்பட்டது. திடீரென 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜே.கே.எம்.சி) கடந்த 21/11/2018 அன்று ஆளுநரிடம் ஆட்சியமைக்க கோரிக்கை வைத்தது. தனக்கு பாஜகவின் 26 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற கட்சிகளை சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு உள்ளதாக கூறியது. இதேபோல மறுபுறத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி 28 உறுப்பினர்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இவர்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரசின் 18 உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் மக்கள் ஜனநாயக கட்சியான பிடிபி தெவிரித்தது. இந்நிலையில் மாநில ஆளுநரான சத்யபால் மாலிக் இரண்டு தரப்புகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காமல் தன்னிச்சையாக சட்டப்பேரவையை கடந்த 21/11/2018 அன்று கலைத்து உத்தரவிட்டார். 

இரண்டு தரப்பினரில் யாருக்கு ஆதரவு அதிகமாக உள்ளதோ அதை கண்டறிந்து ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல், தான்தோன்றித்தனமாக அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பிரயோகப்படுத்தியது முற்றிலும் தவறானது, நியாயமற்றது, கண்டனத்துக்குரியது. இதற்கு ஆளுநர் சொல்லும் காரணங்கள் என்னவென்று பார்த்தால்;

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வகையில் குதிரைபேரம் நடக்கும் என்றும், பொருந்தாத கூட்டணியாக எப்படி ஆட்சியமைக்க முடியுமென்றும், காஷ்மீரின் நலனைக் குறித்தே பிரிவு 356-ன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக கூறியுள்ளார். அப்படியெனில், எதிரெதிரான கொள்கைகளை கொண்ட பாஜகவும், பிடிபியும் கடந்த காலத்தில் எப்படி ஆட்சியமைக்க முடிந்தது. அதுபோல, பிடிபி கட்சி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை தொலைநகல் (Fax) மூலமாக அனுப்பியது கிடைக்கவில்லை என்றும், 21/11/2018 நாளானது விடுமுறை என்றும் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். ராஜ்பவனில் அதிகாரிகள் இருப்பார்களே, அப்படியிருந்தும் எப்படி கிடைக்கவில்லை என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. ஆனால், அதே தேதியில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜே.கே.எம்.சி) அனுப்பிய தொலைநகல் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்றது எப்படி என்பது புரியவில்லை. 

இதற்கிடையில், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தன்னுடைய டிவிட்டரில் பாகிஸ்தானின் உத்தரவுப்படியே ஆட்சியமைக்க பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சியும் உரிமை கோரியதாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை அபத்தமாக கூறியபோது, முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதை கண்டித்தபின் தன்னுடைய கருத்தை திரும்பப்பெற்றார் என்பதெல்லாம் மிகவும் விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான நடவடிக்கையே. இப்படி பல சந்தேகங்கள் காஷ்மீர் ஆட்சிக்கலைப்பில் எழுந்துள்ளன. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்தவர். அவரும் ஆளுநர் மாலிக்கின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார். 

ஆளுநர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டே தன்னிச்சையாக முடிவு செய்து சட்டமன்றத்தை கலைத்திருப்பது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாணது. மத்திய - மாநில அரசு உறவுகளை ஆய்வுசெய்த சர்காரியா கமிஷனின் பரிந்துரையை புறந்தள்ளி அதற்கு மாறாக ஆளுநர் மாலிக் மேற்கொண்ட நடவடிக்கை பொறுப்பற்றதாகும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவரே அதை அத்துமீறிய ஆளுநரின் நடவடிக்ககையை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஆட்சியமைக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. அதன்பின் ஆட்சியமைத்த கட்சி சட்டமன்றத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று உத்தரவிடுவது மட்டும்தான் ஒரு பொறுப்புள்ள ஆளுநரின் சட்டப்பூர்வமான ஜனநாயகக் கடமையாகும். இதைவிடுத்து ஒரே கட்சியா, ஒரே கொள்கையா என்பதையெல்லாம் பரிசீலிப்பது ஆளுநரின் உரிமை கிடையாது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பது தான் நடைமுறை. அதை விட்டுவிட்டு ராஜ்பவனில் நான்கு சுவர்களுக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில ஆளுநர் பெரும்பான்மை கொண்ட மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணியை அழைக்காமல் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து அந்த ஆட்சியும் தானாகவே சட்டமன்றத்தில் தனது ஆதரவை நிரூபிக்க முடியாமல் அதன் முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்தார். 

பாஜக ஆட்சியில் உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசத்திலும் இந்த கூத்தை நடத்தினார். அருணாச்சல பிரதேசத்தில் 2016இல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தபின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்து ஆளுநரின் ஆட்சிக்கலைப்பு தவறானது என்று பாஜக அரசு அப்போது குட்டு வாங்கியது. அதேபோல, உத்தரகாண்டில் ஹரீஸ்ராவூத் தலைமையிலான அரசாங்கத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாளே கலைத்தது. அதை மறுபடியும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் ஆளுநரின் ஆட்சிக்கலைப்பை தவறு என்று தீர்ப்பளித்து அவரே மீண்டும் பொறுப்பேற்றார். 2005இல் பீகாரில் பூட்டாசிங் கவர்னராக இருந்து ஆட்சிக் கலைப்பு நடந்தபோது, உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கை தவறானது என்று உத்தரவிட்டு பெரும்பான்மை உள்ள ஆட்சியை கலைக்கமுடியாது என்றும் ஆணையிட்டது. ஜார்க்கண்டில் 2004இல் கவர்னர் சையது 41 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டவரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால், எதிர்முனையில் 80 பேர் ஆதரவுபெற்ற அர்ஜீன் முண்டாவை அழைக்காமல் ஆளுநர் சையது செய்த நடவடிக்கையை கண்டித்தபின் 2004இல் அர்ஜூன் முண்டா ஜார்கண்ட் முதல்வரானார். இதேபோல, நாகாலாந்தில் 1992இல் அம்மாநில ஆளுநர் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆட்சியைக் கலைத்தார். ஆனால், அது முற்றிலும் முரணாணது என்று திரும்பவும் ஆட்சி நிறுவப்பட்டது. அதேபோல, 2009 நவம்பரில் குஜராத்தில் ஆளுநர் கமலா பெனிவால், நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது, லோக்அயுக்தா விடயத்தில் கவர்னருக்கும் மோடிக்கும் அங்கு பிரச்சனை ஏற்பட்டது. பிற்காலத்தில் கமலா பெனிவாலை அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதெல்லாம் வரலாறுகள். கடந்த காலத்தில் மாநில ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் நடந்த பனிப்போரை பற்றி என்னுடைய பதிவுகள் வருமாறு. 

https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2018/05/blog-post_35.html

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#கவர்னர்
#ஆளுநர்
#Article_356

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
24-11-2019.
rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...