Wednesday, November 27, 2019

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டாமா?*

_*தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான விடயம்.*_

*தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டாமா?*
-------------------------------------
தமிழக - கேரள முதல்வர்கள் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்புழா பிரச்சனைகள் குறித்து மட்டும் பேசப்பட்டதாக தெரிகிறது. இருமாநில அனைத்து நதிநீர் பிரச்சனைகளை குறித்தும் பேசவே இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமான பெரியாறு அணை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை என்னாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் 2014ல் உச்சநீதிமன்றம் முதற்கட்டமாக 142 அடி நீர் தேக்கலாம், அடுத்து பேபி அணையை பலப்படுத்தி 152 அடி தேக்கிக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி 142 அடி நீர் தேக்கப்படுகிறது.

அடுத்தகட்டமாக 152 அடியாக உயர்த்தும் திட்டத்திற்காக அணைப்பகுதியில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு 5 ஆண்டுகளாக கேரளா அனுமதி மறுத்து வருகிறது. பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கியும் அந்த பணியை தொடங்க முடியாமல் வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு பாதையை மூடி வைத்துள்ளது. 20 ஆண்டுகளாக அணையில் மின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது. அதற்கு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கியும் அந்த பணிகளையும் தொடங்க முடியவில்லை. 

தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர், ஊழியர்கள், தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்று திரும்புவதிலும், கேரளாவின் கெடுபிடிகளால் அஞ்சும் நிலை நீடிக்கிறது. அணைப்பகுதிக்குள் வெளியாட்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க, தமிழக அரசு இரும்புக்கதவு அமைக்கும் பணியையும் கேரளா தடுத்துவிட்டது. அணை பாதுகாப்பு கேரள போலீஸ் பொறுப்பில் இருப்பதால், தமிழக பொறியாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கு இரு மாநில பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 நாட்களுக்கு முன் தமிழக அரசு, பரம்பிக்குளம் - ஆழியாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா ஆகிய இரு நதிநீர் பிரச்னைக்கு மட்டும் தனித்தனி குழு அமைத்து அறிவித்துள்ளது. பெரியாறு அணை பிரச்னைக்கு குழு அமைக்காமல் கைவிரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்புழா ஆகியவை முக்கியமான தமிழர்களின் பிரச்சனை தான். மறுக்கவில்லை. தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள். இந்த இரண்டு பிரச்சனை மட்டும் பேசுவதற்கு இரண்டு குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணையை கடந்த 17-10-2019 அன்று வெளியிட்டுள்ளது. 

ஆனால், கேரளாவுடன் இன்னும் பல பிரச்சனைகள் தீர்க்கக்படாமல் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீரில்லாமல் தமிழகத்தின் பல வட்டாரங்கள் தவிக்கின்றது. அதைகுறித்தெல்லாம் ஏன் பேசவில்லை. 
அவை வருமாறு,
கேரளத்தின் அச்சன்கோவில் – பம்பையை தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பது, குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பம்பாறு போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இதையெல்லாம் பேசித் தீர்க்க வேண்டாமா? 
அதுமட்டுமல்ல, மேற்கு நோக்கி பாயும் கேரள நதிகளின் எச்ச நீரை தமிழகத்திற்கு திருப்புதல் போன்ற பல பிரச்சனைகளில் மத்திய அரசின் குழுக்களின் பரிந்துரைகளைக் கூட கேரள அரசு தூக்கி எறிந்தது. இதுகுறித்து 1983இல் தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012இல் தீர்ப்பு வழங்கியும் எந்த நடவடிக்கையும் விரைவாக இல்லை என்பது தான் வேதனையான விடயம். கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டாமா?

_*தமிழக கேரள நதிநீர் பிரச்னைகள் குறித்தான எனது விரிவான பதிவு வருமாறு.*_
தமிழகத்தில் பருவமழையும்  பொய்த்து விட்டது . இந்நிலையில் கேரளாவில் இருந்து நதிநீர் ஆதாரங்கள் , தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் .கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு கால்வாய் கேரள அரசால் மூடப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன . நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு , உள்ளாறு , சென்பக தோப்பு அணை உடைப்பு பிரச்சினை ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணைத்திட்டம்;ஏற்கனவே அனைவரும் அறிந்த முல்லை பெரியாறு பிரச்சினை, கொங்குமண்டலத்தில் சிறுவாணி , பம்பாறு ,பவானி ,சோழையாறு,ஆழியாறு-பரம்பிக்குளம்,அமராவதி பிரச்சினை, பாண்டியாறு -புன்னம்புழா ஆகிய நதிகளை பற்றி உச்சநீதிமன்றத்தில் 34 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடர்ந்த வழக்கில் இந்த பிரச்சினைகளை எல்லாம் குறிப்பிட்டு இருந்தேன் . அத்தோடு கேரளாவில் உள்ள நீர் படிக்கைகளான அச்சன்கோவில்-பம்பை , தமிழகத்தில் உள்ள  சாத்தூர் அருகே உள்ள வைப்பாறு உடன் இணைக்கவேண்டும் என்ற பிரச்சனையும் பிரதானமானது .

தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள சித்திர புழா திட்டத்திற்கு . பாலக்காடு , திருச்சூர் மாவட்ட குடிநீர் மற்றும் பாசனங்களுக்காக வழங்கப்படுகிறது .  சோழையாறு அணை மூலம் மணக்கடவு தடுப்பணை மூலம் 7.25   கன அடி தண்ணீரை கேரளாவுக்கு  தமிழகம் எந்த தொய்வில்லாமல் வழங்குகிறது  .  தமிழகத்தில் இருந்து  அரிசி , பருப்பு , காய்கறிகள் , பால் என அனைத்து தேவைகளையும் கேரள மக்களுக்கு அனுப்பி  வருகின்றோம் . ஆனால் தமிழக நதிகளின் நீர் ஆதிபத்தியங்களுக்கு மட்டும் கேரளா சண்டிதனம் செய்கின்றது . எல்லாவற்றிலும் நம்முடைய பெருந்தன்மையை கேரளா புரிந்து கொண்டு செய்கின்றதா ? புரியாமல் செய்கின்றதா என்று தெரியவில்லை .நதிநீர் பிரச்சினைகள் குறித்து கேரள அரசிடம் பல சுற்று பேச்சுவார்த்தையை தமிழக அரசு நடத்தி விட்டது .ஆனால் எந்த முடிவும் எந்த பயனும் இதுவரை  எட்டாமல் போய்விட்டது .

கேரளத்தின் நீர் வளம் சுமார் 2500 லிருந்து 2800வரை  ஆகும் 

கேரள மாநிலத்திற்கு தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சி தான் . மீதமுள்ள நீரை தமிழகத்திற்கு கொடுத்தால் சுமார் 8 .20 இலட்சம் ஏக்கர்  பாசன வசதி பெரும் . இதனால் கேரளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது . கேரளாவில் 85 க்கும் மேற்பட்ட நதிகள் மேற்கு நோக்கி பாய்கிறது . இந்த நதிகள் மூலம் 1.98 மில்லியன் கியூபிப் மீட்டர் தண்ணீர் செல்கிறது. இதில் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கீயூபிக் மீட்டர் செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது . மேற்கு நோக்கி பாயும் நதிகளை தமிழகத்திற்கு திருப்புவது பற்றி மத்திய அரசு 1976 ஆம் ஆண்டு குழு அமைத்து இத்திட்டத்தை பற ஆராய்ந்தது இந்த நதிகளை தமிழகத்திற்கு திரும்புவதற்கு  சாத்தியக்கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது அதன்பின்பு மத்திய , தமிழக , கேரள அரசுகள் பல முறை இது பற்றி பேசியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை .நாடாளுமன்றம் , சட்டமன்றத்தில் இப்பிரச்சினை பலமுறை  எழுப்பபட்டுள்ளது . கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு , பாரதபுழா , சாலக்குடி , பெரியாறு , ஆழியாறு , நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ளன . இந்த நதிகள் கேரள மாநிலத்தில் பாலக்காடு , மல்லாபுரம் , ஆகிய இடங்களில் பாய்கிறது , அந்த பகுதிகளை வளம் சேர்க்கின்றன .  


ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் தீர்வு காணமல்  தொடர்கின்றன . இன்று நடக்கும் பேச்சுவார்த்தையிலாவது தெளிவான அனுகு முறையோடு நல்ல முடிவுகள் எட்ட வேண்டும்  என்று தமிழகம் விரும்புகின்றது . ஆதலால் கேரள அரசோடு பேசும் போது தமிழக அரசு குறிப்பிட்ட பிரச்சினை மட்டும் பேசாமல் . குமரி மாவட்டம் நெய்யாறிலிருந்து நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா வரை உள்ள நதிநீர் பிரச்னைகளை அவசரமாகவும் அவசியமாகவும் பேசி தீர்க்க  வேண்டிய கடமைமையை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
27-11-2019.

#கேரள_நதிநீர்_பிரச்சனை
#KSRPostings
#KSRadhakrishnan_Postings


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...