Saturday, August 14, 2021

#மதுரை_ஆதீனம்:

 #மதுரை_ஆதீனம்:

—————————-
காலமான மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானமாக 1975-ல் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் பட்டம் ஏற்றுக்கொண்டார்.

கடந்த 1979-லிருந்து இவரோடு நெருக்கம் உண்டு. அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். செல்பேசி வந்தவுடன் வாட்ஸப்பில் செய்திகள் அனுப்புவதும் பேசுவதும் உண்டு. சில ஆதீனங்கள் செல்பேசியில் பேசுவது கூடாது என்று ஒரு மரபை இன்றைக்கும் வைத்துள்ளனர். மறைந்த மதுரை ஆதீனம் காலத்திற்கேற்ப தன்னுடைய பணிகளையும், நடைமுறைகளையும் மாற்றிக்கொள்வார்.
விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரன் மற்றும அ.அமிர்தலிங்கம் மீதும் அன்பு பாராட்டியவர். இந்த இரு ஈழத்தமிழ் தலைவர்களோடு நான் மதுரை ஆதீனத்தை சந்தித்ததுண்டு. ஈழப்பிரச்சனையில் இவருடைய அக்கறையும், களப்பணிகளையும் 1983-85 வரை பார்த்துள்ளேன். டெசோ கூட்டங்களிலும் இவர் கலந்து கொள்வார்.
ஈழத்தமிழர் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது, நான் சமயவாதி, அமைதியை நாடுபவன், இலங்கையில் தமிழ்மக்கள் அழிக்கப்படுகின்றார்கள் என்று ஆக்ரோசத்தோடு, நான் என்செய்வேன் என்றுத் தன்னுடைய ருத்திராட்ச மாலையை கூட்டத்தில் தூக்கி எறிந்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றன. தான் அணிந்திருந்த மோதிரம் போன்ற தங்க ஆபரணங்களை ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு கூட்டத்திலேயே எடுத்து கொடுத்ததெல்லாம் அன்றைக்கு ஒரு முக்கிய செய்திகளாக அமைந்தன.
அன்றைய தஞ்சை மாவட்ட சீர்காழியில் பள்ளி படிப்பை முடித்தாலும், இவருடைய சொந்த ஊர் திருச்சந்தூர் உடன்குடி. இவருடைய தந்தையார் திருச்சந்தூரிலேயே வாழ்ந்தார். அருணகிரி என்று பத்திரிக்கையாளராக
வும் இருந்தவர்.
மண்டைக்காடு கலவர நேரங்களில் 1982 வரை அங்கேயே தங்கி அமைதி நிலைநாட்ட வேண்டுமென்று பணிகளை செய்ததும், அந்த சமயத்தில் கன்னியாகுமரி சென்றபோது இவரோடு அமைதிக் கூட்டங்களுக்கு சென்றதெல்லாம் நினைவுகள். மதுரைக்கு சென்றால் ஆதீனம் மடத்திற்கு அழைப்பார், அதிகமாக செல்ல இயலாது. இருப்பினும் 6 மாதத்திற்கு ஒருமுறை அவரைச் சந்திப்பது உண்டு. அப்போது இலங்கையில் தமிழர் பிரச்சனை, திரிகோண மலையில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதெல்லாம் சொல்வார்.
அன்றைய திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மீனாட்சிபுரம் 1981-ல் மதமாற்றப் பிரச்சனையிலும் இவர் எடுத்த அக்கறை இன்றைக்கும் நினைவுள்ளது.
செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், பழைய ஆவணங்களை எல்லாம் தொகுத்து மதுரை ஆதீன வரலாற்றை 2007ம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார் அருணகிரிநாதர். அதைஎனக்கு அனுப்பி அதுகுறித்துகருத்தையும் கேட்டார்.
அதில் "திப்பு சுல்தான் மதுரை ஆதீன மடத்துக்கு நேரில் வந்து அன்றைய ஆதீனம் (282) பாம்பணிநாத ஞானசம்பந்த தேசிகரிடம் உரையாடி, பூஜைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல் முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அக்தர் வகைகள், வெள்ளி வாள் ஆகியவற்றுடன், ஆண் யானை ஒன்றையும் பரிசளித்தார்"என்ற குறிப்பு உள்ளது.இலங்கை திருகோணமலை தொடர்புகள் பற்றி கூறுகிறார்.
"மதுரை மீது படையெடுத்து வந்த ஔரங்கசீப்பின் மாலிக்காபூர் அன்றைய ஆதீனம் (237) வேலாயுத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இரண்டு குதிரைகளை பரிசாக வழங்கியது" பாண்டிய மன்னர்கள், நாயக்கர் மன்னர்கள் வரலாறு மற்றும் ராபர்ட் டி நோபிலி, சீகன் பால்கு, வீரமாமுனிவர் போன்ற கிறிஸ்தவர்கள மதுரை ஆதீனத்துக்கு வந்த செய்தியையும், அவர்களின் பணிகளை அந்த நூலில் தொகுத்துள்ளார் அருணகிரிநாதர்.
கதைசொல்லி இதழை வாசித்துவிட்டு பாராட்டுவார். தினமணி போன்ற இதழ்களில் என்னுடைய கட்டுரை வந்தால், வாசித்துவிட்டு என்னைப் பாராட்டுவதும் உண்டு.
தகுதியே தடை என்று நான் சொல்வதை, அடிக்கடி சொல்லி உங்களுக்கு வாய்ப்பு வழங்காதது எனக்கு வருத்தத்தை தந்தாலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறிர்கள். ஆனால் உங்களை மறுப்பதுசம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் நல்லதல்ல என்பதை மென்மையாக என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14.08.2021

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...