Thursday, April 4, 2019

*நாடாளுமன்ற தேர்தலில் நளகொண்டா வேட்பாளர்கள்.* தமிழகத்தில் மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதியிலும்.......

*நாடாளுமன்ற தேர்தலில் நளகொண்டா வேட்பாளர்கள்.*
தமிழகத்தில் மொடக்குறிச்சி சட்ட மன்ற
தொகுதியிலும்.......
--------------------------

கடந்த 1980, 90 காலகட்டங்களில் வாக்குச்சீட்டு காலத்தில் சின்னத்தைப் பார்த்து முத்திரையிட்டு, அதை சரியாக மடித்து ஓட்டுப் பெட்டிக்குள் போடுவதற்குள் சிலருக்குப் போதும் போதும் என்றாகிவிடும். வாக்குச் சீட்டுக்கே இந்த நிலையென்றால், வாக்குச் சீட்டு புத்தக வடிவில் இருந்தால், வாக்காளர்கள் நிலை எப்படி இருக்கும்? இப்படியான ஒரு விநோத தேர்தலை 1996இல் அன்றைய ஆந்திரத்தின் (தற்போது தெலுங்கானா) நளகொண்டா தொகுதி வாக்காளர்கள் எதிர்கொண்டார்கள்.

அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நளகொண்டா தொகுதியில் 480 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர். இந்த பாதிப்பை அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், ‘ஜல சாதனா சமிதி’ என்ற அமைப்பின் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தனர்.

அந்த தொகுதியில் மட்டும் 66 பெண்கள் உள்பட 537 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 35 பேருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 22 பேர் வேட்பு மனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டார்கள். இறுதியில் 480 பேர் களத்தில் நின்றார்கள். 

இத்தனை பேர் போட்டியிட்டதால் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சீட்டு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வாக்குச் சீட்டுக்கு பதிலாக ஒரு வாக்குப் புத்தகத்தையே தயாரிக்க வேண்டியிருந்தது. ஒரு ஆள் உள்ளே அமர்ந்து கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமாக வாக்குப் பெட்டிகள் உருவாக்கப்பட்டது. 

நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகளவில் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி என்ற பெயர் நளகொண்டாவிற்கு உண்டு. இதேபோல, கர்நாடக மாநிலம் பெல்காம் தொகுதியிலும் 456 பேர் போட்டியிட்டு கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

தமிழகத்தில் மொடக்குறிச்சி சட்ட மன்ற
தொகுதியிலும் 1996 இல் அதிகமான வோட்பளார்கள போட்டியிட தேர்தல் 
தள்ளி வைக்கப்பட்டு, நீண்ட வாக்கு சீட் 
அச்சடிக்கப்பட்டது.

#Indian_Elections
#இந்திய_தேர்தல்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
04-04-2019

No comments:

Post a Comment