Friday, April 26, 2019

பறவைகளுக்கு உள்ள புரிதல் மானிடத்திற்க்கு இல்லாதது வேதனையையும் அவமானம் ஆகும்.......


பறவைகளுக்கு உள்ள புரிதல் மானிடத்திற்க்கு இல்லாதது வேதனையையும் அவமானம் ஆகும்.......
————————————————-
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 350 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 10 பேர் இந்தியர்கள், 2 பேர் ஆஸ்திரேலியர்கள். 60 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவசர கால சட்டமும் அங்கு நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பு செயலாளரும் தன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தியா ஏற்கனவே கோவையில் நடந்த ஒருசம்பவத்தையொட்டி இது போன்ற நிகழ்வுக்கான எச்சரிக்கை அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது தொடர்பாக இந்தியா 3 தடவை எச்சரித்தும் இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்று தகவல். குண்டுவெடிப்பு விசாரணைக்கு ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் விசாரணைக்கு உதவி செய்வதாக கூறியுள்ளன. மிகவும் கவனிமாக திட்டமிடப்பட்ட அவச்செயலாகும்.

ஈஸ்டர் பண்டிகயையொட்டி நடந்த இந்த குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்டவர்கள் கொழும்புவைச் சேர்ந்த இருவரும் ஆஸ்திரேலியாவில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், தொழிலதிபரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்படியான பின்னணியைப் பார்க்கும்போது, இந்த சதித்திட்டங்கள் சர்வதேச அளவில் திட்டமிப்பட்டதாக தெரிகிறது. இவர்களின் கொடுநோக்கம் தான் என்ன? அமைதியான உலகில் அப்பாவி மக்களை தண்டிப்பதில் இவர்களுக்கு என்ன காரணம் என்பதும் புரியவில்லை. 

இது இலங்கைக்கு மட்டுமல்ல, இப்படியான சம்பவங்கள் உலகில் எங்கும் நடக்ககூடாது என்பதை மானிடம் புரிந்து கொள்ளவேண்டும். பிறந்தோம், வளர்ந்தோம், இயற்கையின் மண்ணில் மடிவது தான் நடைமுறை. ஆனால், நமக்கே எதிர்பாராத இழப்புகள், சூழ்ச்சி, வஞ்சனைகளில் சாகடிப்புகள் என்பது இயற்கை நீதிக்கு மாறானது. எத்தனையோ அறிவியல் கோட்பாடுகள், டார்வின் கொள்கை, மனிதன் பிறக்கவேண்டும், போராட வேண்டும், வெற்றிபெற வேண்டுமென்று வழிவகுக்கிறது. இந்த கொடுமைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. உலகம் பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் கொண்ட பூமிப்பந்து. இங்கு ஒற்றுமை அவசியம்.

வாலி பாடியது போல,
*“பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனகிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் 
-வாலி”*

இந்த தத்துவத்தைக் கூட அறியாத மாக்கள் இருப்பதே இந்த பூமிக்கு சுமை.
பறவைகளக்கு உள்ள புரிதல் மானிடத்திற்க்கு இல்லாதது வேதனையையும் அவமானம் ஆகும்.......

#இலங்கை_குண்டுவெடிப்பு
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-04-2019

No photo description available.

No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...