Sunday, July 18, 2021

#உழுவார்_உலகத்தார்க்கு_ஆணி!

#உழுவார்_உலகத்தார்க்கு_ஆணி!
——————————————————-
'ஆடிப் பட்டம் தேடி விதை'
ஆடியில் விதைப்பு 
தையில் அறுவடை
என சொலவடைகள் உண்டு.
விவசாய வேலைகள் துவங்கிவிட்டது…
விவசாயிகள் பாடுகள், கவலைகள் அதிகம்.

ஒரு பக்கம் கடன் தொல்லை, வீட்டு செலவுகள், பெண் குழந்தைகளுக்கு திருமணம், குழந்தைகளுக்கு படிப்புச் செலவு... இப்படியாக விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்டவேண்டி உள்ளது.  விவசாயமோ மழை பெய்யாமல் வறட்சியால் அடிக்கடி பொய்த்துப் போகின்றது. அப்படியே விளைச்சல் நன்றாக இருந்தாலும் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. விவசாய இடுபொருள்களின் விலையோ பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் சமன்பாடான லாபகரமான பொருளாதார நிலை விவசாயிக்கு ஏற்படவில்லை. தங்களுடைய நிலத்தையும் விட முடியாமல் வருவாய் உள்ளதோ, இல்லையோ உழுதுகொண்டு இருக்கவேண்டிய கடமையும் சம்பிரதாயமும் இருக்கின்றது. மானத்திற்காக விவசாயத்தை இன்றைக்கு விவசாயிகள் செய்கின்றனர். நிலத்தை தரிசாக போட முடியாது. அப்படிப் போட்டால் கிராமத்தில் "என்னப்பா, நிலத்தை தரிசா போட்டுட்டியே..." என்ற பேச்சு. இந்த பரிகாசத்தை எல்லாம் கேட்கக் கூடாது என்பதற்காக கோவணம் கட்டிக்கொண்டாவது நிலத்தில் ஏதாவது விதைக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். வேறு வழியில்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலை.  கடனை திரும்ப செலுத்த முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறுகிறது. இவ்வாறான சமூகச் சூழலில் விவசாயிகள் விரக்திக்குப் போய், இதுவரை விதர்பா , மகாராஷ்டிரம், ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் #விவசாயிகள் #தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கடன் தொல்லை, விவசாயம் பொய்த்துப் போன காரணத்தினால் 80 விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது,தஞ்சை டெல்டா வறண்டதால் விவசாயிகள் உணவுக்கே வழியில்லாமல் கஞ்சி தொட்டியை திறந்தனர். 1975 ல் கடுமையான பஞ்சத்தினால் அப்போது விவசாயிகள் மக்காச்சோள கஞ்சியை உண்ணவேண்டிய நிலை. 

இந்தியாவில் லட்ச கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இப்படியான விவசாயிகளினுடைய பாதிப்புகளை புள்ளி விவரங்களோடு நீண்ட பட்டியலிடலாம். இதற்கு ஒரு முடிவு வரவேண்டாமா?

விவசாயிகள் 1960களில் இருந்து தங்கள் உரிமைகளுக்காக போராடி, காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு 49 பேருக்கு மேல் பலியானார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து "விவசாயிகள் தற்கொலை ஒரு பேஷனாகிவிட்டது" என்று வாய் கொழுக்க பேசியதுண்டு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, "விவசாயத் தொழிலை விட்டுவிட்டு வெளியேறுங்கள்" என்று சொன்னார். அதே தொனியில்2017இல் மோடி அரசின் விவசாயத் துறையின் துணை அமைச்சர் ஒருவர், "விவசாயத்தை விட்டு ஒழியுங்களேன்" என்று பேசியது விவசாயிகள் மத்தியில் வேதனையைத் தந்தது. இப்படியாக விவசாயிகள் பரிகாசத்துக்கு உரிய சமுதாயமாக ஆகிவிட்டார்களே என்ற வேதனையும் வாட்டுகிறது. விவசாயிகள் மட்டும் சாகவில்லை. இன்றைக்கு கிராமங்களும் சிறுக சிறுக செத்துப்போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

விவசாயிகள் பிரச்சினைகளுக்காக எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அனைத்தும் டெல்லி கிரிஷி பவனில் கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கின்றது. சாஸ்திரி காலத்தில் "ஜெய் ஜவான், ஜெய் கிஷான்" என்ற கோஷத்தோடு விவசாயிகளின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டது. சாஸ்திரிக்கு முன்பு பண்டித நேரு, விவசாயத்தை விட தொழில்துறைக்கு முன்னுரிமைக் கொடுத்தார்.  இந்திரா காந்தி அவர்களும் தொழில், அணு ஆய்வு என்று வேறுத் துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினார். எதிரணியில் இருந்த சரண்சிங் போன்றவர்கள் எல்லாம் விவசாயத்துக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது உண்டு.  இப்படியே நிலை சென்றால் விவசாயத்தைப் பற்றி எதிர்காலத்தில் சிந்துவெளி நாகரிகத்தை பற்றி அறிய மொகஞ்சதாரோ, ஹரப்பாவை ஆய்வு செய்தது போல எதிர்காலத்தில் கிராமங்களைத்தான் ஆய்வு செய்ய முடியும். விவசாயம் அறவே அழிந்துவிடுமோ என்ற பெரும் பதற்றம்தான் ஏற்படுகிறது. 

இவ்வாறான நிலையில் விவசாயத்தை பாதுகாக்கவேண்டுமென்றால் சில அவசிய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

1. விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற நிலையில் கையகப்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
2. 1960 கால கட்டங்களில் நடைமுறைக்கு வந்த பசுமைப் புரட்சி என்ற நிலையில் விவசாய நிலங்கள் களர் நிலங்களாகிவிட்டன. இயற்கை விவசாயத்தை அவசியம் பேணி காக்கின்ற வகையில் சில சட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 
3. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை முழுமையாக ஒழிக்கவேண்டும். 
4. விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்க வேண்டும்.
5. விவசாயிகளுடைய குழந்தைகள் கல்லூரிகளில் படித்தால் சிறப்பு சலுகைகள் வழங்கவேண்டும்.
6. விவசாயிகளுடைய அனைத்து வங்கிக் கடன்களை அறவே தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகள் முடிவுகள் மேற்கொள்ளவேண்டும். 
7. உலக மயமாக்கல், தாராள மயமாக்கலால் விவசாயப் பாதிப்பைத் தடுக்கவேண்டும். 
8. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்ய அரசும், விவசாயிகளும் கொண்ட சட்ட அதிகாரம் பெற்ற ஒரு கமிஷன் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கவேண்டும். 
9. விவசாய இடுபொருள்களை மானியத்தில் எளிதாக தட்டுப்பாடில்லாமல் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.
10. திரைத்துறைகளில், இலக்கியத்தில் விருதுகள் வழங்குவதைப் போல நாட்டின் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்படவேண்டும்.
11. தொழிற்சங்கங்களைப் போல விவசாய சங்கங்களும் உரிய உரிமைகளோடு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உரிய சட்டபாதுகாப்பு வழங்க வேண்டும். 
12. ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை ஆழப்படுத்தி அங்குள்ள கருவேல மரங்களை அறவே அழிக்கவேண்டும். 
13. விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களைப் போன்ற மரவகைகளை அனுமதிக்கக் கூடாது. அதை அரசே முன்னின்று அந்த அழிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
14. தமிகத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, குமரி மாவட்டம் நெய்யாறு, அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறு இணைப்பு, செண்பகவல்லி, உள்ளாறு, அழகர் அணை, கோதையாறு-கீரியாறு, பாலாறு, பொன்னியாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
15. தடையில்லாத மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதைப் போல, விவசாய பம்பு செட்டுகளுக்கும் வழங்க வேண்டும்.
16. பயிர் காப்பீடு ஒப்புக்கு இல்லாமல் உண்மையான காப்பீடாக செயல்படுத்தப்படவேண்டும்.
17. ஒவ்வொரு வட்டத் தலைநகர்களிலும் மரபு சார்ந்த விதை பண்ணைகளும், கிட்டங்கிகளும் அமைக்கப்படவேண்டும்.
18. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலையை கூடுதலாக்கி, விவசாயத் தொழிலுக்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்தவேண்டும்.
19. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும்.
20. வனவிலங்குகளால் விவசாயப் பொருள்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
21. சொட்டுநீர் பாசன முறையை மேலும் விரிவுபடுத்தவேண்டும். 
22. விவசாய நிலங்களில் செல்பேசி கோபுரங்கள் அமைப்பதைத் தடுக்கவேண்டும்.
23. தரிசு நிலங்களை முறையான விளைச்சல் நிலங்களாக்க முறைப்படுத்தவேண்டும்.
24. மீத்தேன் வாயு, எரிவாயு குழாய் பதிப்புகள் போன்ற ரசாயன சூழல்களுக்கு விளைநிலங்களைப் பயன்படுத்தக்கூடாது.
25. நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்காக மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்ல எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது.இப்படி பல
விடயங்கள்…..

இவையெல்லாம் இன்றைய விவசாயிகளின் நிலையும், அதை பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளும் ஆகும். 

'மணப்பாறை மாடு கட்டி..
மாயவரம் ஏரு பூட்டி.. 
வயக்காட்டை உழுது போடு 
செல்லக்கண்ணு!'' 

தொன்றுதொட்டு இருக்கும் வேளாண்மை மறையாமல்; உயிரோட்டமான இந்த வரிகளில் உள்ள நமது விவசாயக் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டாமா?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
18-7-2021.


No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...