Friday, July 9, 2021

உலகத்தமிழ்_மாநாடுகள்.

#உலகத்தமிழ்_மாநாடுகள்.
----------------------------------

உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.







கடந்த1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.

முதல் மாநாடு

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாம் மாநாடு

1967 இல் அண்ணா தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.

https://www.dtnext.in/News/City/2019/04/21054415/1115066/1968-International-Tamil-Conference-A-celebration-.vpf?fbclid=IwAR2tS2Opn9XIJoVCFqT2pmTI8Bb6oZoPGErrBLSs1QCoWp2fXIhjvvq0Pdc 

மூன்றாவது மாநாடு

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.

இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.

நான்காவது மாநாடு

1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாடு கலவரம் !!
கடந்த1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்பதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஏனென்றால் அப்போதைய யாழ் மேயர் ஒரு சிங்கள அரசியல் கட்சியின் பிரதிநிதி மற்றும் மாநாடு நடைபெறுவதற்கு எதிரானவர். ஆகையால் மகாநாட்டை குழப்புவதற்கு முயற்சிப்பார்என்பதுஏற்பாட்டாளர்களுக்கு நன்கு தெரிந்த விடயம். இறுதியில் அதுதான் நடைபெற்றது.

மாநாட்டின் நண்பகல் உணவு விருந்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தவர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே என்பது தெரியுமா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறுப்பினர் பொறுப்பெடுத்து உணவு வழங்கினார்கள்.விருந்தினர்கள் ஒரு நாள் யாழ்ப்பானத்தை சுற்றிப் பார்த்தார்களே எங்கு எங்கு சென்றார்கள் அங்கு அவர்களை வரவேற்றவர்கள் யார்.கட்சியினர் தானே அந்த வருடம் திரு அமிர்தலிங்கம் அவர்கள் தனது தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு தோற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். ஜனார்த்தனன் போன்ற தமிழகத்தில் இருந்து வந்த பிரமுகர்கள் இருந்தனர்.
போலிசார் தடியடி நடத்த துவங்கியதும் அங்கு நின்றவர்கள் கைகட்டி சும்மா நிற்கவில்லை. செருப்புகளால் கதிரைகளால் கையில் அகப்பட்ட எல்லாவற்றாலும் போலீசார் மீது எதிர்த்தாக்குதல் செய்தார்கள். அவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு போலிசார் முன்னேறி வந்தார்கள். அதன் பின்பு மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். அந்த சிங்கள போலிசாருக்கு மேலே மின்கம்பி இருப்பது தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே சுட்டார்களா? ஒரு மொழி சார்ந்த கலாச்சார விழாவில், ஒரு அரச பயங்கரவாதம் நடந்தது.

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டால் மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். பெண்களும் யுவதிகளும் எல்லா திசைகளிலும் யாழ்ப்பாண நகர் எங்குமாக ஓடி ஒளிந்தார்கள். அங்கே இருந்த இளைஞர்கள் கூட்டம் எவரும் வீடு செல்லவில்லை. யாழ்ப்பாண நகரின் மூலை முடுக்கெல்லாம் தேடித்தேடி பெண்களை கூட்டி வந்து ஆரியகுளம் சந்தியில் வைத்து பஸ்களில் ஏற்றி அனுப்பினார்கள். பெரும்பாலும் எல்லாப் பெண்களும் வீடு சென்று விட்டார்கள் என்று முடிவு செய்த பின்புதான் எல்லா இளைஞர்களும் வீடு சென்றார்கள்.

5 வது முதல் 8 வது மாநாடு வரை

முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது.

ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. 

பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் நடத்தப் பெற்றன.

கலைஞர் முதல்வராக இருந்த போது கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

#உலகத்_தமிழ்_மாநாடு
#World_Tamil_Conference
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-07-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...