Tuesday, October 13, 2015

சிவகாசியை பாதிக்கும் சீன பட்டாசு - China Crackers - Sivakasi


தீபஒளி திருநாள் தீபாவளி நெருங்குகிறது , குட்டி ஜப்பான் என்ற சிவகாசியில் பட்டாசு தொழிலில் கொடி கட்டி பறந்தது. சீன பட்டாசு இறக்குமதியால் சிவகாசி பட்டாசு தொழில் பாதித்து வருகிறது.


சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவும் , மத்திய அரசின் உறுதிமொழியை மீறியும் இந்தியாவில் வந்து இறங்குகின்றன . சீனபட்டாசுக்கு அனுமதி இல்லாமலே சுமார் இரண்டாயிரம் சரக்கு பெட்டகங்கள் இந்தியாவினுள் வந்து இறங்கியுள்ளது என்று கணக்கு கூறுகிறது. வெறும் சீனபட்டாசு நினைத்துக்கொள்ளாமல் , இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையாகவும் அணுக வேண்டும்.



சிவாகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் , அலுமினிய நைட்ரேட் கொண்டு தயாரிக்க படுகிறது இதனால் பெரிதான பாதிப்புகள் ஏற்படாது. அனல் சீன பட்டாசுகள் பொட்டாஷியம் குளோரைட் கொண்டு தயாரிக்க படுகிறது. இதனால் எளிதில் தீபற்றுவது மட்டுமல்லாமல் , ஆபத்தான சூழ்நிலையையும் ஏற்படுத்தகூடிய பட்டாசாகும். சீன பட்டாசுகள் மக்களை ஏமாற்றுகின்ற வகையில் மலிவான விலையில் விற்கபடுகிறது. சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளின் ஒலி 145 டெசிபல்தான் , அனால் சீன பட்டாஸின் டெசிபல் அளவு அதிகமானது. இந்தியாவின் பட்டாசு தேவையை நிறைவு செய்தது சிவகாசியே.


தரத்தில் உயர்ந்த சிவகாசி பட்டாசுகளை புறக்கணித்துவிட்டு , சீன பட்டாசுகளை வாங்குவது நல்லதல்ல. தூத்துக்குடி துறைமுகத்திலும் , சென்னை துறைமுகத்திலும் எப்படியோ இந்த பட்டாசுகள் வந்து இறங்கிவிடுகின்றன. கடந்த வருடம் மும்பை துறைமுகத்தில் சோதனையிட்ட பொழுது , சீன பட்டாசு அனுமதியில்லாமல் வந்திறங்கியது. அதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.  அதுமட்டுமல்லாமல் அஸ்ஸாம் , அருணாச்சல பிரதேசம் , பூட்டான் வழியாகவும் சீன பட்டாசுகள் கடத்தப்பட்டு வருகின்றன.


அரசுக்கு இழப்பு:

உள்நாட்டில் தயாராகும் பட்டாசுகளுக்கு, மத்திய அரசுக்கு, 12.5 சதவீதம் கலால் வரியும், மாநில அரசுக்கு, 14.5 சதவீதம் வணிக வரியும் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு, 2,000 கோடி ரூபாய்க்கு, ஆர்டர்கள் குறைந்துள்ளதால், கலால் வரி, 240 கோடி ரூபாய்; வணிக வரி, 290 கோடி ரூபாய் என, 530 கோடி ரூபாய், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

காரணம் என்ன?

சீன பட்டாசு இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் இரும்பு, 'ஸ்கிராப்' மற்றும் பொம்மைகள் என்ற ஆவணப் பெயருடன், சீனாவில் இருந்து பட்டாசுகள், கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் வழியாக இறக்குமதியாகின்றன.'நம் நாட்டிற்குள் இப்படி கள்ளத்தனமாக வரும், சீன பட்டாசுகளின் ஊடுருவலைத் தடுக்க வேண்டும்' என, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். 'மாநில அரசுகளும், சீன பட்டாசு விற்பனையைத் தடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், சீன பட்டாசுகள் வரத்து தொடர்வதால், சிவகாசி ஆலைகள் தள்ளாடுகின்றன.

சுங்கத்துறை அலட்சியம்:

தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜா கூறியதாவது: ஜூனில், மும்பை துறைமுகத்தில், 17.5 கோடி ரூபாய் மதிப்பிலான சீன பட்டாசுகள் கையகப்படுத்தப்பட்டன. இவை யாருக்கு வந்தவை என, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பஞ்சாப், உ.பி., மாநிலங்களுக்கு, சமீபத்தில், 2,000 கன்டெய்னர்களில் சீன பட்டாசுகள் வந்துள்ளதால், வட மாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு, ஆர்டர்கள்
வரவில்லை.
தீப்பட்டி தொழில் ,அச்சுத்தொழில், பட்டாசு தொழில் என்று கடந்த நூற்றாண்டில் சிறப்பு பெற்ற சிவகாசி நகரம் இன்றைக்கு இந்த தொழில்கள் அங்கே பாதிக்கப்பட்டு , பாடுபடும் தொழிலாளர்களும் , உற்பத்தியாளர்களும் சிரமத்தில் உள்ளனர். கடந்த 1991ல் இருந்து சிவகாசியில் உள்ள தொழில் உற்பத்தியாளர்கள் , மத்திய அரசையும் மாநில அரசையும் வற்புறுத்தி எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாதது வேதனையான செய்தியாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது இது குறித்து பேச , வைகோ அழைத்து சென்றபொழுது நானும் உடன் சென்றேன் . பிரதமர் வாஜ்பாய் இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் சற்றும் இதற்க்கு அசையவில்லை என்பதுதான்  வேதனை. இவ்வாறான தொழில் நஷ்டத்தில் இருக்கும்பொழுது சீனாவிலிருந்து பட்டாசுகளை இறக்குவது மேலும் மேலும் சிவகாசி உற்பத்தியாளர்களை சிக்கலில் தள்ளிவிடும் என்பதுதான் எதார்த்தம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Sivakasi #Crackers #China_Imports

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...